1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (12:38 IST)

பேர் போட்டுக்கிட்டா பொதுச்செயலாளர் ஆகிடுவாங்களா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்!

எம்.ஜி.ஆர் இல்லத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் கழக பொதுசெயலாளர் என சசிக்கலா பெயர் இடம்பெற்றது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

1972ல் திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் அதே ஆண்டு அக்டோபர் 17ம் நாளில் அதிமுக கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் கட்சி 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அதிமுகவினர் பலரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் சசிக்கலா மரியாதை செலுத்தியதுடன் கல்வெட்டு ஒன்றையும் திறந்துவைத்தார். அதில் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கொடியை ஏற்றியவர் திருமதி வி.கே.சசிக்கலா, கழக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அதிமுக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “பொதுச்செயலாளர் என பெயர் போட்டுக் கொண்டுவிட்டதால் அவர் பொதுசெயலாளர் ஆகி விடுவாரா? ஜெயலலிதா நினைவிடத்தை 8 மாதங்களாக பார்க்க வராமல் இன்று வந்துள்ளார். இனி அடுத்த ஆண்டு வருவார். என்ன புரட்சி செய்தார் சசிக்கலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.