1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (12:55 IST)

மதங்களுக்கு இடையில் மோதலைத் தூண்டினார் – சித்து பிரச்சாரத்துக்குத் தடை !

பிஹாரில் பிரச்சாரத்தின் போது இரு மதங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்கும்படி பேசிய புகாரளிக்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்து இன்னும் 3 நாட்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் ஜிங் சித்து காங்கிரஸ் கட்சியின் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகவும் உள்ளார். இதனையடுத்து மக்களவைத் தேர்தலுக்காக தனது மாநிலத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில்  ஏப்ரல் 16 ஆம் தேதி சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முஸ்லிம்கள் உள்ள அந்த பகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய சித்து ‘ பாஜக உங்களை மதரீதியாக ஒடுக்குகிறது. இங்கு நீங்கள் 65 சதவீதம் பேர் இருக்கிரீர்கள். ஆகவே நீங்களே பெரும்பாண்மை. நீங்கள் சேர்ந்து வாக்கு அளித்தால் மோடியை விரட்டலாம், ஆகவே பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ எனப் பேசினார்.

மதத்தை முன்னிறுத்தி சித்து பேசியதாக இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட பாஜகவினரும் சித்துவின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சித்து மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123, 125 ஆகிய பிரிவின் கீழும், ஐபிசி பிரிவு 188-ன்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சித்து மீதானப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் ‘ சித்து பேசிய வார்த்தைகள் கண்டனத்துக்குரியவை. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானவை. அதனால் அடுத்த 72 மணிநேரத்துக்கு சித்து எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சிகள், நேர்காணல்கள், பொதுமக்களிடம் பேசுவது ஆகியவற்றை மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை 23-ம்தேதி(இன்று ) காலை 10 மணிமுதல் நடைமுறைக்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளது.