1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (15:18 IST)

பிகாருக்குள் நுழைந்தது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ராகுல் காந்தியின் யாத்திரை சற்றுமுன் பீகாருக்குள் நுழைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவரும் ராகுல் காந்தியை சற்றுமுன் பீகார் மாநிலத்திற்குள் நுழைந்தார். அவருக்கு உள்ளூர் மக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர். 
 
பீகாரில் நேற்று முதல்வர் நிதீஷ் குமார் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகி உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி முதல்வர் நிதிஷ் குமாருக்கு பதிலடி தரும் வகையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசிய போது, ‘இந்த யாத்திரை எதற்காக என்று பலரும் கேட்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக ஆகியவை சித்தாந்த ரீதியாக வெறுப்பை பரப்பி வருகின்றன. ஒரு மதம் மற்றொரு மதத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறது. மக்கள் மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே, வெறுப்பு சந்தையில் அன்பு எனும் கடையை நாங்கள் திறந்துள்ளோம். நாட்டின் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை இந்த யாத்திரை நிகழ்த்தும். நாங்கள் புதிய கண்ணோட்டத்தை, சித்தாந்தத்தை வழங்கி உள்ளோம்" என கூறினார்.
 
Edited by Siva