செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (13:58 IST)

சுதந்திர போராட்டத்திற்கு இணையானது ராமர் கோவில் போராட்டம் – பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நட்ட பிரதமர் மோடி இது சுதந்திர போராட்டத்துக்கு இணையானது என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக தற்போது அயோத்தி வந்தடைந்துள்ள பிரதமர் மோடி முதலாவதாக அங்குள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த அனுமன் கர்கி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள அனுமன் சிலைக்கு தானே தீபம் ஏற்றி வழிப்பட்ட பிரதமர் மோடியை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று அவருக்கு பட்டு துணி அணிவித்து மரியாதை செய்தனர். பிறகு குழந்தை ராமரின் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் ராமர் கோவில் அமைய உள்ள இடத்திற்கு வந்தார்.

அங்கு பூஜைகள் நடைபெற்ற பின் அடிக்கல் நட்டார் பிரதமர் மோடி. பிறகு தற்போது மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமர் மோடி “பல காலமாக நடந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைவதால் மொத்த அயோத்தியுமே சுதந்திரம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ராமர் கோவில் அமைவதற்காக நடைபெற்ற போராட்டமானது சுதந்திர போராட்டத்திற்கு நிகராக உள்ளது. இதற்காக உயிர்தியாகம் செய்த அத்தனை பேருக்காகவும் 130 கோடி மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அமைதிகாத்த மக்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது.இது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இதன்மூலமாக நாட்டின் ஒருமைப்பாடு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரிவினைவாதிகளின் திட்டத்தை முறியடித்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் அமைவதன் மூலம் அயோத்தி பொருளாதார ரீதியான வளர்ச்சியை எட்டும்” என கூறியுள்ளார்