இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!
பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து இனிமேல் எப்போதும் விலகமாட்டேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் உறுதியாக அறிவித்தார்.
பிகாரில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 2 முறை பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் இணைந்த முதல்வர் நிதிஷ்குமார் இனிமேல் பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்று உறுதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "முன்பு எனது கட்சியில் இருந்த சிலரின் அழுத்தம் காரணமாக இரண்டு முறை கூட்டணியை மாற்றும் முடிவை எடுத்தேன். ஆனால் இனிமேல் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமே வராது," என்று உறுதியளித்தார்.
முன்னதாக, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இல்லத்தில், அமித் ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமித் ஷாவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva