1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (11:55 IST)

பிரதமர் காலில் நிதிஷ்குமார் விழுந்தது பீகார் மக்களுக்கு அவமானம்.! பிரசாந்த் கிஷோர் விமர்சனம்..!!

Nithish Kumar
பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆலோசகர்  பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களை வென்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் கால்களில் விழப் போனார். அப்போது அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, பிரசாந்த் கிஷோர் தற்போது நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
Prasanth Kishore
பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து நிதிஷ்குமார் பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசுகிறார்கள் என்றும் ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்துக்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 
2025 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் பீகாரின் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியின் கால்களை நிதீஷ் குமார் தொடுகிறார் என்று பிரஷாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.