1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (16:38 IST)

பீகாரில் ஆட்சித் தப்பியது.! பெரும்பான்மையை நிரூபித்த நிதீஷ் குமார்.!!

nithish kumar
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் பெரும்பான்மையை நிரூபித்தார். 
 
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மெகா  கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். 
 
இதனிடையே  ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மெகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் கடந்த மாதம் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 


இந்நிலையில் நம்பிக்கை வாகெடுப்பில் 129 உறுப்பினர்கள் பீகார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இருந்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.