1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (13:55 IST)

எங்கேயாவது மூலையில இடம் கொடுங்க! – வீடியோவில் வந்த நித்யானந்தா!

பெண் சீடர்களை ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளதாக நித்யானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நித்யானந்தா.

ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தா தன் பிள்ளைகளை அடைத்து வைத்திருப்பதாகவும், பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் தம்பதியினர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து ஆசிரமத்தில் புகுந்த போலீஸார் அந்த பிள்ளைகளை மீட்டதுடன், பெண் சீடர்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நித்யானந்தா வெளிநாடு தப்பி சென்று விட்டதாகவும், அவர் இந்தியா திரும்பினால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்றும் ஆமதாபாத் எஸ்.பி, ஆர்.வி.ஆசாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இமயமலையில் இருந்து ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் நித்யானந்தா. அதில் ”எனது அனைத்து குருகுலத்திலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சந்திக்க எந்த தடையும் கிடையாது. பல பெற்றோர்கள் ஆசிரமத்திலேயே கூட தங்கியிருக்கிறார்கள்.

எனக்கும் எனது சீடர்களுக்கும் அதிக துன்புறுத்தல்கள் அளிக்கப்படுகின்றன. இனி எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க எனக்கு உலகில் ஏதாவது ஒரு மூலையில் காணி நிலம் அளித்தால் அங்கேயாவது போய்விடுவேன். நானும் என் சீடர்களும் அங்கே வேத ஆகம ரீதியிலான பயிற்சிகளை செய்வோம்.

நான் யாருக்கும் எதிரானவன் இல்லை. ஆனால் இந்து மதத்தையும், நாட்டையும் வெறுக்கும் சிலர் எனக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.” என்று பேசியுள்ளார்.

நித்யானந்தாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்த சிலர் காணி நிலம் எதற்கு ஏக்கர் கணக்கில் வெச்சிருக்கீங்களே? என கேள்வியெழுப்பியுள்ளனர்.