1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kathua's rape rape is an ordinary event BJP's controversial speech

கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் ஒரு சாதாரண நிகழ்வு - பாஜக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

கத்துவா
ஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆசிஃபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது சாதாரண நிகழ்வு என காஷ்மீரின் புதிய துணைமுதல்வர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
ஒரு சிறுவன் உட்பட 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவையில் உள்ள அனைத்து பா.ஜ.க. அமைச்சர்களையும் ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க மேலிடம் உத்தரவிட்டது. இதனையடுத்து பாஜகவைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் காஷ்மீரில் பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் நிர்மல் சிங் ராஜினாமா செய்தார். புதிய துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த கவீந்தர் குப்தா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்றவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

கத்துவா பலாத்கார நிகழ்வு ஒரு சாதாரண சம்பவம் என்றும் தேவை இல்லாமல் பெரிதாக்கப்பட்டு நாட்டை பரபரப்பாக்கி விட்டது எனக் கூறினார். ஏற்கனவே பாஜக அமைச்சர்கள் சர்ச்சைக் கருத்தைக் கூறிவரும் நிலையில், அவரது இந்த பேச்சு மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.