HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?
இந்தியாவின் அதிக விலை கொண்ட கார் பதிவு எண் என பேசப்பட்ட 'HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை, ரூ. 1.17 கோடிக்கு ஏலம் எடுத்தும் பணத்தை செலுத்த தவறிய சுதீர் குமார் மீது ஹரியானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏல தொகையை செலுத்தத் தவறிய சுதீர் குமாரின் சொத்துகள் மற்றும் வருமானத்தை முழுமையாக விசாரிக்குமாறு ஹரியானா போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார். ஏல பணத்தை செலுத்தாததால், சுதீர் குமாரின் ரூ. 11,000 டெபாசிட் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
நிதித்திறன் இல்லாதவர்கள் ஏலத்தின் தொகையை உயர்த்துவதை தடுக்கவே இந்த விசாரணை என்றும், ஏலம் எடுப்பது ஒரு பொறுப்பு என்றும் அமைச்சர் விஜ் வலியுறுத்தினார்.
மேலும், இதுகுறித்து வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நம்பர் பிளேட் மீண்டும் ஏலத்துக்கு விடப்படும். 'HR88B8888' எண் நவம்பர் 26 அன்று ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran