1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (13:51 IST)

பாடத்திட்டங்கள் குறைப்பு; பள்ளி திறப்பு எப்போது? – மத்திய அரசு பதில்!

கொரோனாவால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்ட சூழலில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு தாமதமாவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ”தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பல வேண்டுகோள்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையில் பள்ளி பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும், வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நேரத்தை குறைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் முதலில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை குறைப்பதாகவும், படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பதாகவும் தெரிவித்துள்ல அவர் இன்னும் இரண்டு மாதங்களில் பள்ளிகள் திறக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.