1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (15:27 IST)

மத்திய இடைக்கால பட்ஜெட்.! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்..!!

budjet
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.. 
 
2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சுமார்  ஒரு மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் 12 மணிக்கு நிறைவடைந்தது. 
 
2024-2025 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்: 
 
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
train
வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளுக்கு நிகாராக மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
 
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், 2 இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
airport
517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் மேலும் 1000 புதிய விமானங்கள் வாங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
 
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
வெவ்வெறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளதாகவும்,  ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lakasathivu
சிறிய அளவில் உள்ள  சுற்றுலா மையங்களின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அந்த சுற்றுலா மையங்களில்  வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்காக நீண்ட கால வட்டியில்லா கடன்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது