1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick

பழங்குடியினரை பந்தாடிய காட்டு யானை! சக யானை சாவுக்கு பழி வாங்குகிறதா? – மக்கள் அச்சம்!

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் பகுதியில் கடந்த சில நாட்கள் முன்னர் மின்வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில், அதனோடு இருந்த சக யானை ஒன்று மக்களை தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசாவிலிருந்து மத்திய பிரதேசத்திற்குள் காட்டு யானைகளான ராம் மற்றும் பல்ராம் என்ற யானைகள் நுழைந்துள்ளன. மத்திய பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் சுற்றி வந்த இவற்றில் ராம் என்ற யானை சமீபத்தில் ஜபல்பூர் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. விசாரணையில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் யானை சிக்கிக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு யானையான பல்ராம் பைகா பழங்குடியினர் இருவர் வயலில் வேலையில் இருந்த சமயம் வந்து தாக்கியுள்ளது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் மெல்ல குணமாகி வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடன் இருந்த சக யானை இறந்ததால் பல்ராம் கோபத்தில் மனிதர்களை தாக்குவதாக பைகா மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்ராமை பிடிக்க கும்கி யானைகள், யானை பிடிக்கும் நிபுணர்கள் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.