வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (15:13 IST)

மோடிக்கு அக்னி வீரர்களை அதானி - அம்பானி வீட்டுக் காவலர்களாக நிறுத்தனும் - ஒவைசி!

அக்னிபத் வீரர்களை அதானி - அம்பானி வீட்டுக் காவலர்களாக நிறுத்த விரும்புகிறது மோடி அரசு என ஒவைசி விமர்சனம். 

 
அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி அக்னிபத் திட்டம் தொடர்பாக பாஜகவையும் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். நான்கு வருடங்கள் நாட்டைக் காத்து விட்டு ஒரு இளம் முன்னாள் ராணுவ வீரராக வெளியே வரும் அக்னிவீரர்கள், அதானி மற்றும் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டும் அல்லது பாஜக அலுவலகத்திற்கு வெளியே சௌகிதாரி (பாதுகாவலர்) பணியை செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.
 
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்திலும் அவர் தொடர் ட்வீட்டுகளை செய்து அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். மோடி ஜி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நிலைமயை சரி செய்ய 50 நாட்கள் அவகாசம் கேட்டீர்கள். அப்போது கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. லாக்டவுனின் முடிவை நாங்கள் கண்கூடாகவே பார்த்தோம். ஆனால் அரசாங்கம் தனது தவறுகளை மீண்டும் செய்ய விரும்புகிறது. இப்போது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தில் கை வைக்க விரும்புகிறது.
 
மோடிஜி, இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலம். அவர்கள், உங்களிடம் இருந்து அடிக்கடி பதவி நீட்டிப்பு பெறும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அல்ல. அப்பாவி இளைஞர்களின் குரலைக் கேட்டு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாயுங்கள். இந்த அக்னி வீரர் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்று ஒவைசி கூறியுள்ளார்.