1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (10:33 IST)

மிதக்கும் வெள்ளத்தில் தலையில் குழந்தையை சுமந்து காப்பாற்றிய போலீஸ் – மனதை நெகிழ செய்த வீடியோ

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 2 மாத குழந்தையை போலீஸ் ஒருவர் தலையில் தூக்கி வந்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வட மாநிலங்களில் விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நிறைய கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவிபுரா கிராமப்பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்க காவல்துறை அதிகாரி கோவிந்த் சவ்தா சென்றிருந்தார். அங்கே ஒரு பெண்ணும், பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையும் வெள்ளத்தில் சிக்கி கொண்டிருந்தனர். அங்கு சென்ற கோவிந்த அந்த குழந்தையை ஒரு பக்கெட்டில் வைத்து தலையில் சுமந்தபடி கழுத்தளவு தண்ணீரில் நடந்து வந்திருக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் குழந்தையை தலையில் சுமந்து வந்து காப்பாற்றியிருக்கிறார்.

இந்த மனிதநேயமிக்க சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோவிந்த் குழந்தையை தலையில் தூக்கி வரும் வீடியோ காட்சியை தனது ட்விட்டரில் ஷேர் செய்த ஐ.பி.எஸ் அதிகாரி சம்ஷீர் சிங் “போலீஸ் அதிகாரி கோவிந்தின் மனிதநேயத்தையும், ஈடுபாட்டையும் பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.