செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:59 IST)

கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மூன்று வயது குழந்தை

ஜூலை 25. இரவு 11.30 மணி. சல்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மூன்று வயது குழந்தையோடு டாட்டா நகர் (ஜாம்ஷெட்பூரில்) ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

திடீரென கறுப்பு சட்டை அணிந்த ஒருவரும், வெள்ளை சட்டை அணிந்த இன்னொருவரும் இந்த மூன்று வயது குழந்தையை தூக்கி கொண்டு இன்னொரு வாசல் வழியாக வெளியேறினர்.

பின்னர், தலை துண்டிக்கப்பட்ட இந்த குழந்தையின் உடல்தான் கண்டெடுக்கப்பட்டது.

கூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின்னர், இந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் செய்த குற்றத்தை அவர்கள் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று ஜாம்ஷெட்பூர் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எத்தேஷம் வாகரிப் பிபிசியிடம் உறுதி செய்துள்ளார்.

"கொல்லப்பட்ட குழந்தையின் தாயிடம் இருந்து இந்த தகவல் அறிந்தோம். ஜூலை 26ம் தேதி டாட்டா நகர் காவல் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என்று அவர் புகார் அளித்திருந்தார். தனது குழந்தையை தன்னுடைய காதலன் திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் கூறியிருந்தார். அவர்கள் இருவரும் மேற்கு வங்கத்திலுள்ள ஜகால்டாவில் இருந்து புறப்பட்டுள்ளனர். ஒடிஷாவுக்கு செல்ல வேண்டும். பயணம் செய்த வேளையில் இந்த பெண்ணும், குழந்தையும், துணைவரும் டாட்டா நகர் ரயில் நிலையில் தங்கிச் செல்ல இருந்தனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், "இந்த குழந்தையின் தாய் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது துணவரை கைது செய்தோம். ஆனால், அவரால் எந்த தகவலையும் சொல்ல முடியவில்லை. அந்த ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, அனைத்தும் தெளிவாகின. இது தொடர்பாக, ரின்கு சோய் மற்றும் அவரது சகா கலாஷ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ரமதீன் பாகனில் இருந்து எடுக்கப்பட்ட இந்த குழந்தையின் உடலை, அதன் தாய் அடையாளம் கண்டுள்ளார்" என்றார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் முந்தைய தண்டனை

இந்த வழக்கு பற்றி விசாரணை செய்யும் ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் நூர் முஸ்தஃபா அன்சாரி, ரின்கு ஏற்கெனவே சிறையில் இருந்தவர் என்று கூறியுள்ளார்.

2008 மற்றும் 2015ம் ஆண்டுகளில் குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் என இரண்டு தனித்தனி வழக்குகள் அவருக்கு எதிராக பதிவிடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் காவல்துறையில் அவரது தாயார் காவலராக பணியாற்றி வருகிறார் என்றும் அன்சாரி கூறியுள்ளார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது நபர். புல்வாமாவில் தற்போது பணியில் இருக்கிற சிஆர்பிஎப் ஜவானின் மகன்தான் கைலாஷ் குமார். இவருக்கு 16 வயது மகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளன. இவரது நடவடிக்கை காரணமாக கடந்த ஓராண்டாக இவரது மனைவி பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

கைலாஷ் இந்த சம்பவம் பற்றி அதிக தகவல்கள் வெளியிடாத நிலையில், ஒரு குழந்தையை கடத்திய பிறகு, அதனை கைலாஷிடம் கொடுத்துவிடுவதாக ரின்கு சோய் கூறியுள்ளார்.

இவர்களை தடுப்புக் காவலில் வைக்க காவல்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.

அப்பாவி குழந்தை கொலை

இந்நிலையில், கொல்லப்பட்ட குழந்தையின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவர்களோடு இந்த குழந்தை புன்னகைத்து கொண்டு இருப்பது தெரிகிறது. அதன் கரங்களை பச்சை மற்றும் தங்க நிற வளையல்கள் அலங்கரித்துள்ளன. இந்த குழந்தை இறந்துவிட்டது ஒரு சோகமான நிகழ்வு. புதன்கிழமை வரை ஜாம்ஷெட்பூரில் தங்கியிருந்த இதன் தாய், அவரது கிராமத்துக்கு திரும்பியுள்ளார். இந்த வழக்கு சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜார்கண்டில் குற்றங்கள் அதிகரிப்பு

கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வல்லுறவு சம்வங்கள் ஜார்கண்டில் நடைபெற்றள்ளன.
ஜாம்ஷெட்பூரின் இதே இடத்தில் இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.