சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை சர்வ சாதாரணமாக முடித்து விட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். 2008 ஆம் ஆண்டு மதுரை கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், பலமுறை கட்டாயப்படுத்தி உறவில் இருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததால், இரண்டு முறை சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு எதிரான விஜயலட்சுமியின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், "சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது" என்றும், "மூன்று மாதங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva