8-வது ஊதியக்குழு.. இனி குறைந்த சம்பளமே ரூ.69,000? ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மறுசீரமைக்க 8-வது ஊதியக் குழு அமைக்கப்படவுள்ள நிலையில், ஊழியர் சங்கங்கள் ஒரு அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளன. இதன்படி, தற்போது ரூ.18,000-ஆக உள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.69,000-ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனைக் குழு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, தற்போதைய ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கோருகிறது.
சம்பள உயர்வுக்கான 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' காரணியை 2.57-லிருந்து 3.83-ஆக அதிகரிக்கவும், ஆண்டு ஊதிய உயர்வை 6 சதவீதமாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது வெறும் ஆரம்பகட்ட முன்மொழிவு மட்டுமே; இதுகுறித்த இறுதி முடிவை அரசு இன்னும் எடுக்கவில்லை.
கடந்த கால ஊதிய குழுக்களின் வரலாற்றை பார்த்தால், ஊழியர் சங்கங்கள் கோரும் தொகையை விட அரசு இறுதி செய்யும் தொகை குறைவாகவே இருக்கும். உதாரணமாக, 7-வது ஊதிய குழுவில் ரூ.26,000 கோரப்பட்ட நிலையில், ரூ.18,000 மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே, இம்முறை குறைந்தபட்ச ஊதியம் ரூ.54,000 முதல் ரூ.58,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் நிதிப்பற்றாக்குறை மற்றும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டே இறுதி முடிவு அமையும்.
Edited by Siva
