1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

பல் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் நாயுருவி மூலிகை...!!

நாயுருவி மூலிகைக்கு 'கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும்  தானே வளரும் மூலிகை ஆகும்.
பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும்  ஒழிந்துவிடும். 
 
கடுமையான பல்வலி இருப்பவர்கள் மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி  பறந்தோடி விடும்.
 
நாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால், பசியே எடுக்காது. ஒரு வாரம் ஆனாலும், உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும். அத்துடன் உடம்பு இரும்பு போல உறுதியாகும். 
 
இதற்கு 'மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும்  கொண்ட இதனை 'அட்டகர்ம மூலிகை’ எனக் கொண்டாடுகிறார்கள், சித்தர்கள்.

நாயுருவியில் ஆண், பெண் இரண்டும் உண்டு. பச்சை நிற  இலை, தண்டுகளை உடையது, ஆண் நாயுருவி எனவும், சிவப்பு நிறத் தண்டு, பாகங்களைக் கொண்டது பெண் நாயுருவி எனவும் அழைக்கப்படுகிறது. இதை ‘செந்நாயுருவி’ என்றும் அழைப்பார்கள். இந்த செந்நாயுருவியில்தான் மருத்துவ குணங்கள் அதிகம்.
 
100 கிராம் நாயுருவி இலையை, 500 மில்லி தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து, எண்ணெய்யில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து, மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறாதப் புண்கள்,  வெட்டுக் காயங்கள், சீழ்வடியும் புண்களின் மீது பூசி வந்தால், உடனடி பலன் கிடைக்கும். இதன் இலைக்கு கண்ணாடியை அறுக்கும்  தன்மையும் உண்டு.