ஞாயிறு, 15 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (18:05 IST)

தென்னைக்கு இடையே அவகோடா - லாபத்தை அள்ளித்தரும் அதிசயம்!

மலைப் பகுதிகளிலும், மழைப் பொழிவு அதிகம் இருக்கும் இடங்களில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படும் அவகோடா சமவெளியில் சாத்தியமா என்ற சந்தேகம் வலுவாக இருந்தது. ஆனால் நாங்கள் நேரில் சென்று பார்த்த அந்த  விவசாயின் தோட்டம் நம் சந்தேகங்களை சுக்கு நூறாக உடைக்கும் வகையில் அமைந்து இருந்தது. அவகோடா சமவெளியில் சாத்தியமே என்பதை நம்மால் நேரடியாக கண் முன்னே பார்க்க முடிந்தது. அந்த தோட்ட உரிமையாரிடம்  அவகோடா சாகுபடி அனுபவத்தையும், சந்தை வாய்ப்பு தொடர்பாகவும்  பல்வேறு கேள்விகளை கேட்டோம். அவரின் தெளிவான மற்றும் தீர்க்கமான பதில்களை இந்தக் கட்டுரையில் காண்போம். 
 
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த திரு. P. R. M. ரவிச்சந்திரன் அவர்கள், தனது 15 ஏக்கர் தோட்டத்தில் மலைவாழை, காய்கறி, மிளகு போன்ற பயிர்களுடன், பராமரிப்பு செலவு குறைவாகவும், அதிக லாபம் தரக்கூடிய அவகோடாவை நெடுநாள் பயிராக வளர்த்து வருகிறார். அது குறித்து அவர் கூறுகையில்  ‘என் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட அவகோடா சாகுபடி, இன்று 60 முதல் 70 ஆண்டுகள் பழமையான மரங்களாக தோட்டத்தில் உள்ளது. இதனுடன், நான் வைத்த 40-45 வயதுள்ள மரங்களையும் வளர்த்து வருகிறேன்," என்றார். 
 
அவரிடம் அவகோடாவில் ரகங்கள் எதும் இருக்கிறதா என கேட்டபோது, தனது தோட்டத்தில் ‘தடியன் குடிசை (TKD) - 1’ மற்றும் ‘அர்கா சுப்ரீம்’ என்ற ரகங்களைப் பயிரிட்டு வருவதாகவும், "TKD - 1 ரகம் 6 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்; அர்கா சுப்ரீம் ரகம் 3½ ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும் எனக் கூறினார்.
 
அவகோடா பழத்தின் எடை மற்றும் விலை குறித்து அவரிடம் நாம் கேட்டோம், அதற்கு பதிலளித்த அவர் ‘ஒரு அவகோடா பழம் குறைந்தபட்சம் 250-300 கிராம் எடைக் கொண்டதாக இருக்கும். சாதாரண சீசனிலும் கூட ஒரு மரத்தில் 40 முதல் 50 கிலோ வரை காய்ப்பும் கிடைக்கும். கிலோவுக்கு ரூ.250 முதல் 300 வரையிலும் விலை கிடைக்கும்.குறைந்தபட்சமாக, ஒரு மரத்தில் 30 கிலோ காய்ப்பும், ஒரு கிலோவுக்கு ரூ.100 என்ற விலைக்கு விற்கப்பட்டால்கூட, ஒரு மரத்திற்கு ரூ.3000 லாபம் கிடைக்கும். 100 மரங்கள் இருந்தால், பராமரிப்பு செலவில்லாமல் ரூ.3 லட்சம் லாபம் பெறலாம். 
 
என்னுடைய சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களிலும் 10 லட்சம் மரங்கள் காய்ப்புத் திறன் கொண்டுள்ளது. அவகோடா சாகுபடியில் எங்கள் பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது," எனவும் மகிழ்ச்சியாக பகிர்ந்தார்.
 
அவரது தோட்டத்தை சுற்றி பார்த்தவாரே அவகோடா பழத்திற்கு முக்கிய பருவகால சீசன் எது என்று கேட்டோம். ‘அக்டோபர் முதல் ஜனவரி கடைசி வரை அவகோடா மரங்கள் நல்ல காய்ப்புத் தரும் என தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
 
மேலும் சந்தையில் அவகோடாவுக்கு அதிகமான தேவை இருக்கிறது, இருந்தாலும் அதன் உற்பத்தி குறைவாக உள்ளது," என்று சந்தை நிலவரத்தை பற்றியும் விளக்கினார்.
 
தென்னையில் ஊடுபயிராக அவகோடா பயிர் செய்யலாமா? என்ற நம் சந்தேகத்துடன் கேள்வி கேட்ட போது, நாம் வியக்கும் வகையில் அவர்  பதிலளித்தார். அது குறித்து அவர் கூறுகையில் ‘பல விவசாயிகள் தென்னை மட்டுமே பயிரிட்டதால், குறுந்து நோய் தாக்குதலால் அவர்கள் பயிர்களை இழந்தனர். இந்நிலையில், சமவெளி மற்றும் தென்னந்தோப்பில் அவகோடா மரங்களுக்கு ஏற்ற 18 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை ஈரப்பதமான சீதோஷ்ண சூழ்நிலையில், பல அடுக்கு பலபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி உருவாக்கினால், நோய் தாக்குதலின்றி வெற்றிகரமாக அவகோடா சாகுபடி செய்யலாம்," என்று தீர்க்கமாக நம்மிடம் கூறினார்.
 
விவசாயத்தில் செலவில்லாமல் அதிக லாபம் பெற,  P. R. M. ரவிச்சந்திரன் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து, மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டியாகவும், ஊக்கமாகவும் உள்ளார்.
 
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் நடைபெறும் “சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே” எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் நடக்க உள்ளது. அதில்  P. R. M. ரவிச்சந்திரன் அவர்கள் அவகோடா சாகுபடி குறித்த இன்னும் பல பயனுள்ள தகவல்களை நேரில் பகிர இருக்கிறார்.   
 
இவரைப் போலவே இன்னும் பல வெற்றி விவசாயிகள் சமவெளியில் மரவாசனைப் பயிர்களை வளர்க்கும் உத்திகளை, முறைகளை விளக்கி சொல்ல உள்ளனர். மேலும் வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.   
 
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.