1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:33 IST)

ரெய்னா தோனியின் நம்பிக்கையை இழந்துவிட்டார்… நியுசி பவுலர் கருத்து!

சி எஸ் கே அணியில் ரெய்னா ஏலம் எடுக்கப் படாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.

அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ரெய்னாவை சி எஸ் கே அணி மீண்டும் எடுக்காதது குறித்து பல விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியுசிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சைமன் டூல் இதுகுறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘ரெய்னா முதலாவதாக தோனியின் நம்பிக்கை இழந்துவிட்டார். அப்படி இருக்கும்போது நீங்கள் மீண்டும் வரவேற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர் உடல்வலுவும் சரியாக இல்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு அவர் பயப்படுகிறார்’ எனக் கூறியுள்ளார்.