1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. PPL Season 2 - Ruby White Town Legends secure stunning win in opening match

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

PPL 2

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன் ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டிச்சேரி சீகம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில், 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று தொடங்கிய 2ஆவது சீசன் ஜூலை 27ஆம் வரை நடைபெறவுள்ளது.

 

  தொடக்க ஆட்டத்தில் ஒசுடு அக்கார்ட் வாரியர்ஸ் (Ossudu Accord Warriors) மற்றும் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் (Ruby White Town Legends) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஒசுடு அக்கார்ட் வாரியார்ஸ் கேப்டன் நிதின் பிரணவ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

 

இதனையடுத்து ரூபி ஒயிட் டவுன் அணி கேப்டன் நெயான் காங்கேயன் மற்றும் லோகேஷ் பிரபாகரன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். லோகேஷ் பிரபாகரன் 4 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆகாஷ் கார்கவே 8 ரன்களில் ஷஃபீக்குதீன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், பவர்பிளே ஓவர்களில் ரூபி ஒயிட் டவுன் அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது.

 

இதற்கிடையில் சிறப்பாக ஆடிய கேப்டன் காங்கேயன் 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து தேஸ்வால் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய அனந்த் பயஸ் மற்றும் வந்தித் ஜோஷி இருவரும் நிதானமாக ஆடியதால், அணியின் எண்ணிக்கை உயர்ந்து. பின்னர் அனந்த் பயஸ் 29 (26 பந்துகள்) மற்றும் வந்தித் ஜோஷி 30 (27 ரன்கள்) எடுத்தனர்.

 

இறுதியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ஒசுடு அக்கார்ட் வாரியார்ஸ் அணி வீரர் முஹமத் ஷஃபீக்குதீன் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஒசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜஷ்வந்த் ஸ்ரீராம் 1 ரன் எடுத்த நிலையில், இரண்டாவது ரன் எடுக்கையில், ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சைலேஷ் வைத்தியநாதன் 12 ரன்களிலும், கார்த்திகேயன் ஜெயசுந்தரம் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

 

சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ராஜசேகர் ரெட்டி 29 பந்துகளில் (1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நிதின் பிரணவ் (13), தாமரை கண்ணன் (10), சிதக் சிங் (10) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

 

போட்டியின் 16ஆவது ஓவரில் முஹமத் ஷஃபீக்குதீன் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசினார். இதனால் கடைசி 4 ஒவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய முஹமத் ஷஃபீக்குதீன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட கிருஷ்ண தத் பாண்டே 27 பந்துகளில் (2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) 32 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

 

கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அஸ்வின் தாஸின் சிறப்பான பந்துவீச்சால் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியினர் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் தரப்பில் அஸ்வின் தாஸ் மற்றும் நமன் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில், காரைக்கால் நைட்ஸ் அணியும் – மஹே மேகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதவுள்ளன. மாலை 6 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும் – வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அடுத்த கட்டுரையில்
என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!