1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (11:28 IST)

இனிமே சேஸிங்கை நம்பி யூஸ் இல்ல.. விக்கெட்டுதான் டார்கெட்! – புது வியூகம் வகுத்த தோனி!

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சுற்றில் பல தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி நேற்றைய இரண்டாம் சுற்று ஆட்டத்தில் வெற்றியை பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் முதல் சுற்றில் 7 ஆட்டங்களில் வெறும் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இதனால் இரண்டாவது சுற்றில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ப்ளே ஆப் செல்ல முடியும் என்ற நிலையில் அணியில் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக தோனி கூறியிருந்தார்.

பெரும்பாலும் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள் 11 பேரில் 5 முக்கிய பேட்ஸ்மேன்கள் 2 அல்லது 3 ஆல்ரவுண்டர்கள், 4 வேக மற்றும் சுழற்பந்து வீசும் வீரர்கள் என வகுத்து கொள்வர். இது அதிக ரன்கள் அடிக்கவும், பிறகு எதிரணி சேஸிங் செய்யும்போது ரன்ரேட்டை குறைக்கவும் அடிப்படையாக பயன்படும் முறை. முதல் சுற்றில் சிஎஸ்கேவும் இதே அடிப்படையில் செயல்பட்டாலும் ரெய்னா போன்றவர்கள் அணியில் இல்லாததால் ரன் ஸ்கோர் செய்வதில் பெரும் சரிவை சிஎஸ்கே சந்தித்து வந்தது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோனி வகுத்த வியூகம் நன்றாக ஒர்க் ஆகியுள்ளது. முதல் தர பேட்ஸ்மேன்கள் நான்கு பேரை மட்டும் முன்னனியாக கொண்டு ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள் என 7 பேரை அணியில் இணைந்து 11 பேரை கொண்டு வந்தார் தோனி. வழக்கமாக பின்வரிசையில் இறங்கும் சாம் கரன் ஓபனிங் இறங்கி சிம்பிளான ஆட்டத்தை ஆடியதுடன், முன்னணியில் பழகி கொண்டுள்ளார். டூ ப்ளஸிஸ் அடிக்காமலே ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தாலும், வாட்சன், ராயுடு கூட்டணியும், தோனி, ஜடேஜா கூட்டணியும் சிறப்பாக செயல்பட்டதால் 167 வரை எட்ட முடிந்தது.

அதன்பிறகு சேஸிங் வந்த சன்ரைஸர்ஸை 7 பந்து வீச்சாளர்களையும் கொண்டு ரன்ரேட்டை குறைத்து அடிபணிய செய்துள்ளது சிஎஸ்கே. கரன் ஷர்மா, ப்ராவோ ஆளுக்கு 2 விக்கெட்டுகளை கொள்முதல் செய்ய, சாம் கரன், ஜடேஜா, தாகுர் ஆளுக்கு தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். பேட்டிங்கை மட்டுமே நம்பியிராமல் அதிக பந்து வீச்சாளர்களை சேர்த்து எதிரணியை திணற செய்து சிஎஸ்கே பெற்ற இந்த வெற்றி தோனியின் புது வியூகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.