1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மே 2024 (07:13 IST)

இந்த மாதிரி இன்னிங்ஸ நான் டிவியில தான் பாத்திருக்கேன்… என்ன சொல்றதுனே தெரில- கே எல் ராகுல் புலம்பல்!

ப்ளே ஆஃப் கனவில் சம வாய்ப்பில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய 57 ஆவது லீக் போட்டி நேற்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் விளையாடி பொறுமையை சோதித்தனர். அதனால் இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த எளிய இலக்கை ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் யாரும் நம்பமுடியாத வகையில் 9.4 ஓவர்களில் எட்டி ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் அந்த அணியின் அபிஷேக் ஷர்மா28 பந்துகளில் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும் சேர்த்தனர். அவர்களின் இந்த அதிரடி இன்னிங்ஸ் ஹைலைட்ஸ் பார்ப்பது போல இருந்தது.

இந்நிலையில் இந்த மோசமான தோல்விக்குப் பிறகு பேசிய லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் “என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர்கள் ஆடியது போன்ற ஒரு இன்னிங்ஸை டிவியில் தான் நாம் பார்த்திருப்போம். அவர்கள் இருவரும் அடித்த ஷாட்களும் பேட்டின் மிடிலில் பட்டன. நிச்சயமாக நாங்கள் 50 ரன்கள் குறைவாக சேர்த்துவிட்டோம். இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் எப்படி மாறியுள்ளது என்பதை நாங்கள் கணிப்பதற்குள்ளாகவே  போட்டியை அவர்கள் முடித்துவிட்டார்கள்.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.