1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:38 IST)

என்னுடைய தவறுதான்… சர்பராஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் தொடங்கியது.  முதலில் மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறிய இந்திய அணி அதன்பின் அபாரமாக விளையாடி உள்ளது. முதல் நாள் ஆட்டமுடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர். ஜடேஜா 99 ரன்களில் இருக்கும் அவரின்தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சதத்தை நோக்கி முன்னேறிய அவரின் விக்கெட்டை 62 ரன்களில் பரிதாபமாக இழந்தார்.

சர்பராஸ் கான் அவுட் ஆன போது டக்கவுட்டில் இருந்து அதைப் பார்த்த ரோஹித் ஷர்மா கோபமாகி தன்னுடைய தொப்பியை கழட்டி வீசி கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஜடேஜாவை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ஜடேஜா “சர்பராஸ் கானுக்காக வருந்துகிறேன். அது என்னுடைய தவறான அழைப்புதான். சிறப்பான விளையாடினீர்கள் சர்பராஸ்” என வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.