1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (07:17 IST)

இரண்டாவது டி 20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இந்தியாவுக்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதில் முதலில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ருத்துராஜ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஆஸி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.