வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (13:33 IST)

இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- கொந்தளித்த கங்குலி, ஹர்பஜன்

சாதனை படைத்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெருமைகளை குலைக்கும்படி அடிக்கடி குற்றசாட்டுகள் சுமத்துவதும், நோட்டீஸ் அனுப்புவதும் அதிகரித்து வருவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் வெற்றிக்கு ஓயாமல் ஓடியவரான ராகுல் ட்ராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆதாயம் கிடைக்கும் இரட்டை பதவிகளை வகித்து வருவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரை அளித்தவர் மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் சஞ்சய் குப்தா. அந்த புகாரில் அவர் “ஒரே சமயத்தில் ஆதாயம் தரும் இரண்டு பதவிகளில் கிரிக்கெட் வீரர்கள் இருக்கக்கூடாது என்பது பிசிசிஐ விதிமுறை. ஆனால் பல கிரிக்கெட் வீரர்கள் அதை பின்பற்றுவதில்லை. குறிப்பாக ராகுல் ட்ராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் இருந்துகொண்டு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

இதற்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு ட்ராவிட் பதிலனுப்பி விட்டார். இருந்தாலும் ஒரு சாதனை படைத்த கிரிக்கெட் வீரரை அவமானப்படுத்துவதாக கொதித்து போன கங்குலி தனது ட்விட்டரில் “இப்போது இந்திய கிரிக்கெட்டில் புதிய ஃபேஷன் வந்துள்ளது. இரட்டை பதவிகளில் இருப்பவர்கள் மீது புகார் அளித்து செய்திகளில் இடம்பெற்று புகழ்பெறுவது. பிசிசிஐ ஒழுங்கு அதிகாரி ராகுல் ட்ராவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” என ஆவேசமாக கூறினார்.

கங்குலியின் கருத்தை ஆமோதித்த பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “ராகுல் ட்ராவிட் போன்ற சிறந்த மனிதரை பார்க்க முடியாது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது அவரது மரியாதையை சீர்குலைக்கும் விஷ்யம் ஆகும். இந்திய கிரிக்கெட்டை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.” என கருத்து தெரிவித்துள்ளார்.