1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (14:34 IST)

யுவ்ராஜ் சிங்குக்கு தன்னை மார்க்கெட்டிங் செய்து கொள்ள தெரியவில்லை… கம்பீர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக தோனி மற்றும் கோலி போன்றோரின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கம்பீர் முக்கியமானக் கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த இன்னிங்ஸ் இன்றளவும் சிறப்பாக பேசப்படுகிறது. ஆனால் அன்றைய போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காமல் தோனிக்குக் கொடுக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் இப்போது 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் குறித்து பேசியுள்ள அவர் அந்த தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற யுவ்ராஜ் சிங்குக்கு போதிய பாராட்டுகள் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதுபற்றி “அந்த தொடரில் யுவ்ராஜ் சிறப்பாக விளையாடினார். அதை நான் அருகில் இருந்து பார்த்தேன். அவருக்கு தொடர்நாயகன் விருதும் கிடைத்தது.

நீங்கள் ஒருவரைப் பற்றி பேசவில்லை என்றால், அவர் மக்களிடம் அதிகமாக தெரியமாட்டார்.  அவருக்கு கிடைக்கவேண்டிய பாராட்டு கிடைக்காது.  ஒருவரை மட்டுமே தொடர்ந்து விளம்பரப் படுத்திக் கொண்டு இருந்தால் அவர் ஒரு பிராண்டாக மாறிவிடுவார். யுவ்ராஜ் சிங்குக்கு தன்னை மார்க்கெட்டிங்  பண்ணிக் கொள்ள தெரியவில்லை போலும்.” எனக் கூறியுள்ளார்.