செவ்வாய், 4 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:09 IST)

இந்திய மண்ணில் எந்த பவுலரும் செய்யாத சம்பவம்.. 90 வருட சாதனையை முறியடித்த பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும்,  இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் இந்திய மண்ணில் 90 ஆண்டுகளாக எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரும் செய்யாத சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

1934ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அமர் சிங் 141 ரன்களுக்கு 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரும் இந்த சாதனையை முறியடித்ததில்லை. இந்நிலையில் 90 ஆண்டுகளுக்கு பிறகு பும்ரா அமர்சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.