1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (09:55 IST)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?

சமீபகாலமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக உடல்நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தும் பல விஷயங்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
 
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதில் கூறப்படுகிறது.
 
நிபுணர் என்று அதில் வரும் சிலர் அனுபவ அறிவைப் பகிர்கின்றனர். இன்னும் சிலர் இவை எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் தகவலை உண்மை என ஏராளமானோர் நம்புகின்றனர்.
 
ஏன் சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எது சிறந்தது? எது நல்லது எது கெட்டது?
 
இவை முழுமையாகத் தெரியாத ஒரு குழப்பம் பலருக்கும் இருக்கிறது.
 
நோய் எதிர்ப்பு சக்தியின் பயன் என்ன?
நம் உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நமது உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 
நோயிலிருந்து பாதுகாப்பது, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய்க்கிருமியைக் கொல்வது தான் நமது உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் முக்கிய வேலை. இத்துடன் நோய்த்தொற்று மீண்டும் வராமல் இருக்க அவை உருவாக்கும் ஆன்டிபாடிகளின்(antibodies) செயல்பாடு முக்கியமானது.
 
இதுமட்டுமின்றி, தடுப்பூசிகளும் நம் ரத்த அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.
 
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நாம் தினசரி "சமமான விகிதத்தில் உணவு" சாப்பிட வேண்டும்.
 
குறிப்பாக, நமது உணவில் போதுமான புரதங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம்?
தினமும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த முடியும். யோகா, தியானம் போன்ற முறைகளையும் நாம் பின்பற்றலாம்.
 
ஆனால் இதைச் செய்யாமல், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்கலாம் என்னும் விளம்பரங்களைப் பார்த்தும், கேட்டும் ஏமாறுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
 
நம் நோய் எதிர்ப்பு சக்தியை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க தினமும் சிறிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
 
அதைச் செய்ய எளிமையான வழிமுறைகள் ஏதுமில்லை. நம் வாழ்வின் கடைசி நாள் வரை செயல்படப் போகும் இந்த உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.
 
உணவை உணவாகக் கருத வேண்டும். அதில் மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டு ஏமாறாதீர்கள்.
 
Infusion எனப்படும் தண்ணீரில் மூலிகை, பழங்களை வைத்து அருந்துவது எந்த நன்மையையும் அளிக்காது. இப்படிச் செய்வதால் அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கிறது. அதனால் தேவையில்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளவேண்டாம்.
 
ஆவி பிடிப்பது, கொதிக்க வைப்பது போன்ற முறைகளால் வைரஸ் இறக்காது. வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் மூக்கு, வாய், தொண்டை வழியாக நுழையாது.
 
வைட்டமின் மாத்திரைகளை தினமும் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாதவரை அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்காது.
 
இருப்பினும், வைட்டமின் குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
 
காய்கறி, பழங்கள் எப்படி விளைவிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஊட்டச்சத்தில் சில மாறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அதன் அளவு மிகச் சொற்பமானதே.
 
பிரதானமாக நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையால் தான் ஊட்டச்சத்துக் குறைபாடு சிலருக்கு ஏற்படுகிறது.
எதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது?
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை உண்பது.
 
அதேபோல போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, உதாரணமாக அலுவலகத்தில் சேரில் அமர்ந்து 8 மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள் நடை பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது.
 
இது மட்டுமின்றி, குளிர்பானங்கள்(Carbonated drinks) அருந்துவது, வெயிலில் அதிகம் செல்லாமல் இருப்பது, புகையிலை, மதுபானம் உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற காரணங்களும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன.
 
மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட பழக்கங்களோ நமது தினசரி வாழ்க்கை முறையில் இருந்தால் அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும்.
 
தினசரி வாழ்வியல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வராமல், ஒரு மாத்திரையின் மூலமாக மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.
கவனிக்க வேண்டியவை
உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக செம்புக் கோப்பையில்(Copper bottle) தண்ணீர் குடித்துவிட்டு செம்புப் பாத்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது என்று சிலர் நம்புகிறார்கள்.
 
ஆனால் அப்படிப் பயன்படுத்தும் நபர்கள், தாமிரக் குறைபாடு(copper deficiency) இருக்கிறதா, அதை அதிகரிக்க வேண்டுமா என யோசிக்கத் தவறுகிறார்கள்.
 
மேலும், பிளாஸ்டிக் கொள்கலன்களைப்(plastic containers) பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. குறிப்பாக சூடான உணவு, பானம் ஆகியவற்றை அதில் வைத்து சாப்பிடுவது, குடிப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று நாம் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம். ஏனெனில் அவை எளிதில் கிடைக்கின்றன.
 
சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்திலிருந்து கிடைக்கும் சில வைட்டமின்கள் குறைபாடு இருப்பது இயற்கையானது.
 
வயதானவர்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், செரிமான அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கு, சில ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது இயற்கையானது. குறிப்பாக இவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும்.
 
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம் தேவை. எனவே, அந்தக் குறைபாடுகளை மாத்திரைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஆயினும், மேற்கூறிய பல காரணங்களால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு வளரும் பருவத்தில் உள்ள சில குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக உப்பு சத்துக் குறைபாடு காரணமாக இந்த பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
 
எனவே குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அவர்களின் தினசரி உணவில் வழங்கும் காய்கறி, பழங்கள் மூலமாக வழங்க வேண்டும்.
 
உணவு மூலமாக ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ள முடியாத நபர்கள் மட்டும் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மாத்திரை மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
 
(கட்டுரையாளர் ஒரு மருத்துவர், இதில் இடம்பெற்றுள்ளவை அவரின் சொந்தக் கருத்துகள் ஆகும்)