செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (21:38 IST)

வைரஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு பரவும்? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள்

வைரஸ். இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது.
சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ், இதனால் பாதிக்கப்பட்ட நபரருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.
 
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.
 
எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
 
எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.
 
பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
21ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.
 
மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.
 
1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் என்று பெயரிடப்பட்டது.
 
லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.
 
2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.
 
அப்போதைய சூழலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
 
திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.
 
நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்லது சிகிச்சை என்று இபோலா வைரஸிற்கு ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
 
21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.
 
Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்
 
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்திருந்தது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது.
 
2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் கூறுகிறது.
 
காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.
 
சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப்படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியது.
 
சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.
 
இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது.
 
தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.
 
Aedes எனப்படும் கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது.
 
முதன் முதலில் உகாண்டாவில் 1947ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1952ல் உகாண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.
 
பின்னர் 2007ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.
 
2015ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
 
கொசுவில் இருந்து பரவக் கூடிய ஜிகா வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது.
 
Aedes கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது.
 
காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள்.
 
ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.
 
நிபா வைரஸ்
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் `Fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
 
1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
 
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.
 
இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.
 
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.
 
நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.
 
காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள். மேலும் மயக்கம், நரம்பு பிரச்சனைகளும் ஏற்படலாம்.
 
இந்த வைரஸிற்கு தற்போது வரை எந்த தடுப்பூசியும் கிடையாது.