வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

ஆப்கன் போராட்டங்களை தாலிபன்கள் கொடூரமாக நசுக்குவதற்கு ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானில் அமைதியாக நடக்கும் போராட்டங்களை தாலிபன்கள் கொடூரமாக நசுக்குவதற்கு ஐ.நா. அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகப் படைகள் சமீபத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. அவர்கள் விலகத் தொடங்கியதில் இருந்தே தாலிபன்கள் நாட்டின் பல பகுதிகளைப் பிடிக்கத் தொடங்கிவிட்டனர். ஆகஸ்ட் 15ம் தேதி அவர்கள் தலைநகர் காபூலையும் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.
 
விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கப் படையினர், அமெரிக்க, ஐரோப்பிய நாட்டினர் மற்றும் ஆதரவாளர்கள் கணிசமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த மாத இறுதியில் முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் தங்கள் உரிமை பாதிக்கப்படும் என்று அஞ்சிய பெண்கள் உள்ளிட்ட பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
இத்தகைய சமீபத்திய போராட்டங்களில் 4 பேர் தாலிபன்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்தள்ளது.
 
போராட்டக்காரர்கள் மீது லத்தி, தடி, துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு போராட்டக் காரர்களை தாலிபன்கள் தாக்கியதாக ஐ.நா. தமது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
 
"அமைதியான முறையில் கூடுவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்துவோர், இந்த போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் போன்றவர்களை கைது செய்வது, அவர்கள் மீது வன்முறையை ஏவுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தாலிபன்களை கேட்டுக்கொள்கிறோம்," என்று ஐ.நா. பெண் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.