வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (23:58 IST)

புரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் இன்று மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், "மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல், இன்று மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பாம்பனுக்கு தென்மேற்கு திசையில் 20 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு - அதிகாலையில் கரையைக் கடக்கக்கூடும்" என்று கூறினார்.
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக பகுதியில் 50 -60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் கன மழைக்கான வாய்ப்பு உண்டு எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
 
தாழ்வான பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்
முன்னதாக, நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தனுஷ்கோடி பகுதியில் கடல் அலையில் சிக்கி புதிதாக போடப்பட்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தனுஷ்கோடி பகுதி மீனவர்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதுகாப்பாக நிறுத்தவேண்டும் என்பதற்காக வடக்கு கடற்கரையிலிருந்து பாம்பன் பாலம் வழியாக தெற்கு குந்துகால் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகளில் மூன்று, நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கி உள்ளன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால் ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்துள்ளன. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 
தமிழகத்துக்கு எச்சரிக்கை
 
வியாழக்கிழமை காலை 5.30 நிலவரப்படி, மன்னாருக்கு 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 120 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 320 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருப்பதாகவும், புயல் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் (புயல் வீசும் வேகம் அல்ல - புயல் நகரும் வேகம்) இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மன்னார் வளைகுடா, மன்னார் கடலோரப்பகுதிகளில் இது அடுத்த மூன்று மணி நேரத்தில் வீசும் என்று 5.30 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று வியாழக்கிழமை நண்பகல் வாக்கில் பாம்பனை மையம் கொண்டு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், பிறகு மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து பாம்பன், தென் தமிழக கடலோரப் பகுதிகள், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று வியாழக்கிழமை இரவும், நாளை வெள்ளிக்கிழமை காலையும் புயல் காற்றாக, 70-80 கி.மீ. வேகத்தில் வீசும் எனறும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதன் தாக்கம் தெரியும் என்றும் படிப்படியாக இது கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.