வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (13:24 IST)

இந்தியாவின் புதிய வரைபடம் - மோடி அரசு மீது நேபாளம் கோபத்தில் இருப்பது ஏன்?

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக வரையறுக்கப்பட்டு, இந்தியாவின் புதிய வரைபடம் ஒன்றை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
அந்த வரைபடத்தில், உத்தராகண்ட் மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள காலாபானி மற்றும் லிபூ பகுதிகள் இந்தியாவுக்குள் அடங்கியதாக அமைந்துள்ளது.
 
ஆனால், இது ஒன்றும் புதிதல்ல என்று இந்தியா கூறுகிறது. ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் புதிய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மத்திய அரசின் கீழ் வரும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக காட்டப்பட்டுள்ளன. ஆனால், அதில் சில இடங்களை நேபாளம் தனக்கு சொந்தமானது என்று கூறுகிறது.
 
இதுதொடர்பாக நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், "காலாபானி பகுதி எங்கள் பிரதேசத்திற்குள் வரும் என்பதில் நேபாள அரசு மிகத் தெளிவாக இருக்கிறது," என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது என்றும், அருகில் உள்ள நாடுகளின் எல்லைப் பகுதியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
புதிய வரைபடத்தில் நேபாளத்துடனான இந்திய எல்லையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேபளத்துடனான எல்லை நிர்ணயம் என்பது இன்னும் வகுக்கப்படும் பொறிமுறையில் இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புணர்வை அடிப்படையாகக் கொண்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
 
புதிய வரைபடத்தில் ஒரே ஒரு மாற்றம்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், அது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை மத்திய அரசு நிர்வகிக்கும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியமைத்தது மட்டும்தான் என்றும் இந்திய சர்வேயர் ஜெனரலான லெப்டினன்ட் ஜெனரல் கிரீஷ் குமார் கூறியுள்ளார்.
 
எந்த எல்லைப்பகுதியும் ஒரு மில்லிமீட்டர் அளவிற்குக்கூட மாற்றம் செய்யப்படவில்லை என்றும், ஜம்மு காஷ்மீர், லடாக்கைத் தவிர, வரைபடத்தின் எந்த பகுதியிலும், வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
 
மேலும், அவர் கூறுகையில், உதாரணமாக 2014 தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது போல புதிய மாநிலம் உருவாக்கப்பட்டாலோ புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டாலோ அது வரைபடத்தில் காண்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், புதிய வரைபடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நேபாளம், இந்தியாவிற்கு அதனை மாற்ற உரிமை இல்லை என்று கூறியுள்ளது.
 
"காலாபானி ஒரு சர்ச்சைக்குரிய பகுதி. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் அதனைத் தீர்க்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தால், அதனை நேபாளம் ஏற்றுக் கொள்ளாது. வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இதனைத் தீர்க்க நேபாளம் தீர்மானித்துள்ளது," என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கிழக்கு இந்திய கம்பெனியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காலாபானி, லிபூ பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று நேபாளம் கூறுகிறது. ஆனால், இந்திய சர்வேயர் ஜெனரல் கிரீஷ் குமார் கூறுகையில், "நாங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்யவில்லை. நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் வரைபடம் வெளியிடுவோம். 2018 அல்லது அதற்குமுன் இருந்த வரைபடத்திலும் காலாபானி, இந்தியாவிற்குள்தான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.