1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மே 2021 (14:25 IST)

ஜெஃப் பெசோஸ் அமெசான் சிஇஓ பதவியில் இருந்து ஜூலை 5 விலகல்

அமெசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெஃப் பெசோஸ் ஜூலை 5ஆம் தேதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது.
இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருக்கிறார்.

அவரது பொறுப்பை ஆண்டி ஜெஸ்ஸி ஏற்றுக் கொள்வார் என்று பெசோஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் தமது முடிவை பெசோஸ் வெளியிட்டதாக மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் டேவ் லீ தெரிவித்துள்ளார்.

இனி பெசோஸ் என்ன செய்வார்?

கடந்த பிப்ரவரி மாதமே, தமது பதவி விலகல் தொடர்பான முடிவை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருந்தார். ஆனால், எப்போது அவர் அந்த முடிவை அமல்படுத்துவார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

அவரது பொறுப்பை ஏற்கவிருக்கும் ஆண்டி, கிளெட் கம்ப்யூட்டிங் தொழிலை கவனித்து வருகிறார். 53 வயதாகும் ஆண்டி ஜெஸ்ஸி, ஹார்வர்டில் படித்த பிறகு, அமெசான் நிறுவனத்தில் 1997ஆம் ஆண்டில் சேர்ந்தார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் தொடரும் ஜெஃப் பெசோஸ்,

நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரசார மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்.

விண்வெளி ஆராய்ச்சியில் இவரது ப்ளூ ஆரிஜின் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால், பதவி விலகுக்கு பிறகு அதில் ஜெஃப் பெசோஸ் கூடுதல் நேரத்தை செலவிடுவார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.