1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (14:34 IST)

சௌதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை குறித்து விசாரணை

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செளதி அரேபியா நாட்டை சேர்ந்த 20 பேர் துருக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
 
விசாரிக்கப்பட்டவர்களில் கஷோக்ஜி திருமணம் செய்துகொள்ளவிருந்த துருக்கியைச் சேர்ந்த பெண்ணான ஹாதிஜா ஜெங்கிசும் ஒருவர். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். இவர் 2018-ம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நுழைந்த பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. 
 
துணைத் தூதரகத்தின் உள்ளே வைத்து, ஜமால் கஷோக்ஜியை செளதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு குழு கொலை செய்தது. தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் இரண்டு பேர், செளதி பட்டத்து இளவரசர் சல்மானின் முன்னாள் உதவியாளர்கள். தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுக்கின்றனர்.
 
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை முன்பு நிராகரித்த செளதி அரேபியா, கடந்த ஆண்டு இந்த கொலை தொடர்பாக எட்டு பேருக்கு தண்டனை வழங்கியது.
 
ஜமால் கஷோக்ஜி கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 5 பேருக்கு மரண தண்டனையும், குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டில் மூன்று பேருக்குச் சிறை தண்டனையையும் செளதி அரேபியா விதித்தது.
 
யார் இந்த கஷோக்ஜி?
 
செளதி அரேபியாவை சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி. செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார்.
 
ஒரு பத்திரிகையாளராக மட்டும் கசோக்ஜி இல்லை. பல தசாப்தங்களாக செளதி அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக ஜமால் கஷோக்ஜி இருந்திருக்கிறார். அவர்களின் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறார். அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டர். அதற்கு பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.
 
இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட் இதழில் கஷோக்ஜி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். வாஷிங்டன் போஸ்டில் தாம் எழுதிய முதல் கட்டுரையில், செளதியில் இருந்தால் தாம் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.