வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (20:43 IST)

அமெரிக்க ராணுவ முகாம் மீது சோமாலியாவில் தாக்குதல் - அல்-ஷபாப் காரணமா?

சோமாலியாவில் அமெரிக்க கமாண்டோ படையினர் பயிற்சியெடுத்துவரும் ஒரு ராணுவ முகாம் மீது ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவின் தெற்கு ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமானநிலையத்தில் பல குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக தெரிவித்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, ராணுவ முகாமின் கதவுகளை கார் வெடிகுண்டு மூலம் தகர்த்தாகவும், அதன்பின்னர் தனது போராளிகளை முகாம் உள்ளே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

''மிகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட ராணுவ முகாமின் உள்ளே தடைகளை தகர்த்து புனித போராளிகள் நுழைந்தனர். மிகவும் தீவிரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் அவர்கள் ஈடுபட்டனர்'' என்று அல்-ஷபாப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமாலியா தலைநகரான மொகதீஷுவின் மேற்கு பகுதியில் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ராணுவ முகாம், அமெரிக்க சிறப்பு படைகள், சோமாலியா படையினர் மற்றும் உகாண்டா அமைதிபடையினர் ஆகியோரின் தளமாக இந்த ராணுவ முகாம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி முகமாகவும், டிரோன்களை ஏவும் தளமாகவும் இந்த ராணுவ முகாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தங்களின் கூட்டு வான்வழி தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக அண்மைய காலங்களில் மொகதீஷுவில் பதில் தாக்குதல்களை அல்-ஷபாப் நடத்துவதாக சோமாலியா கூறுகிறது.