1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Five important information about Alibaba founder

ஜாக் மா: அலிபாபா நிறுவனர் பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்

ஜாக் மா
உலகின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் மா அந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தனது 55ஆம் பிறந்தநாளன்று அவர் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
 
உலகில் பரவலாக அறியப்பட்ட தொழில் அதிபர்களின் ஒருவரான ஜாக் மா குறித்த ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.
 
1. ஆங்கில ஆசிரியர்
 
சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜாக் மா தனது தொழில்முறை வாழ்க்கையை ஓர் ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார்.
கணினி நிரல் மொழிகள் குறித்த அறிவு எதுவும் இல்லாமலே 1990களில், நண்பர்களின் உதவியோடு அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார்.
 
2. மிகவும் செல்வந்தர்
 
2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்.
 
அவரது சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்.
 
அலிபாபா நிறுவனத்தின் 9% பங்குகள் இவர் வசம் உள்ளன. இவற்றின் மதிப்பு 420 பில்லியன் அமெரிக்க டாலர்.
 
3. ஜாக் மா பவுண்டேஷன்
 
ஜாக் மா பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்ய விரும்புவதாக 2013இல் அலிபாபாவின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியபோது அவர் கூறியிருந்தார்.
 
சீனாவில் கிராமப்புறக் கல்வியை மேம்படுத்த ஜாக் மா பவுண்டேஷன் 30 மில்லியன் டாலர் அளிப்பதாக உறுதியளித்தது.
 
4. டிரம்ப் பாராட்டு
 
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டொனல்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில நாட்கள் முன்பு ஜாக் மாவை சந்தித்தார்.
அப்போது "அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளையும் நேசிக்கும் மிகச்சிறந்த தொழில் அதிபர்," என்று டிரம்ப் இவரைப் பாராட்டினார்.
 
5. எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்புவார்
 
2017இல் நடந்த அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில், 'திரில்லர்'  இசைத் தொகுப்பில் மைக்கேல் ஜேக்சன் அணிந்திருந்த உடையுடன் தோன்றினார் ஜாக் மா.
கடந்த ஆண்டு கோங் ஷோ தாவோ எனும் குங்-பூ குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக தாய்-சி எனும் சீன தற்காப்பு கலையை பயிற்சி செய்து வருகிறார்.
அடுத்த கட்டுரையில்
சென்னை-சேலம் 8 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றம்