வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:38 IST)

நிலவில் மனிதன் தரையிறங்கியதாகச் சொல்வது நாடகமா? - ஒரு சந்தேகமும் விரிவான விளக்கமும்

நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது நாடகம் என்று பிரிட்டனில் ஆறில் ஒருவர் நம்புவதாக சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அனைவரது கரங்களிலும் இணையம் இருக்கும் இந்தக் காலத்தில், திட்டமிட்ட மோசடியான செயல்கள் என்ற சிந்தனை அதிகமாக இருக்கின்றன. நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது புரளி என்பது அதன் உச்சகட்டமாக இருக்கிறது.

நிலவில் தரையிறங்கியது, உண்மையில் நடந்தது என்பதை நிரூபிக்க நிவிடியா போன்ற சில நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முயற்சி செய்துள்ளன.

நிலவில் ஒளி

அந்த நிறுவனம், சக்திமிக்க கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட்கள்களையும் பயன்படுத்தி 3 டி ரெண்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். நிலவில் ஒளி எப்படி இருக்கும் என்பதை யதார்த்தமாகக் காட்டுவதற்கு இதைப் உருவாக்கினர். நிலவில் தரையிறங்கிய படங்களில் உள்ள ஒளி பொய்யானது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

 ``பிரபல நாவலாசிரியர், நையாண்டி எழுத்தாளருமான ஜோனாதன் ஸ்விப்ட், `தவறான எண்ணத்தை ஒரு மனிதர் சரிப்படுத்திக் கொள்ள காரண ஆய்வு போதாது. காரண ஆய்வை ஒருபோதும் அவன் அறிந்து கொண்டது கிடையாது.' என எழுத்தாளர் டல்லாஸ் கேம்ப்பெல் தெரிவிக்கிறார் . ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவருக்கு காரணமற்ற கருத்து இருக்குமானால், முட்டாள்தனத்தின் அடிப்படையில் அது இருக்குமானால், அவருடன் காரணங்களை எவ்வளவு தான் நீங்கள் விவாதித்தாலும், அதில் இருந்து அவரை உங்களால் வெளியே கொண்டு வர முடியாது. ஏனென்றால், தொடங்குவதற்கான காரணம் அங்கே இல்லை'' என்கிறார் அவர்.

அவர் கூறுகிறார், `` அவர்கள் உண்மையில் நிலவுக்குச் செல்லவில்லை, நிலவின் சுற்றுப் பாதையில் சில முறைகள் அவர்கள் விண்கலனை செலுத்திவிட்டு, நிலவுக்குச் சென்று திரும்பியதாக நடித்தார்கள் என்ற பரவலான கருத்துகள் எழுந்தன.

பூமியைச் சுற்றி அமைந்திருக்கும் அபாயகரமான வான் ஆலன் பெல்ட் -ஐத் தாண்டி அவர்கள் சென்றிருக்க முடியாது எனவும், புகைப்படங்களில் முரண்பாடுகள் உள்ளன - அவை அனைத்துமே பொருத்தமற்றவையாக உள்ளன எனவும் அவர்கள் கூறினார்கள்.

இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், இதை எங்கோ ஒரு பாலைவனத்தில் செட் அமைத்து படமான எடுத்தார் என தெரிவித்தார். ஆனால், நிலவில் தரையிறங்கியதாக பொய்யாகக் காட்டுவதற்கான தொழில்நுட்பம் 1969ல் கிடையாது. நிலவுக்குச் செல்வதற்கான தொழில்நுட்பம் மட்டுமே 1969ல் இருந்தது'' என்கிறார் ஜோனாதன் ஸ்விப்ட்.

போலியான புகைப்படங்களா?

 ஹசேல்பிளாட் புகைப்பட கருவி நிறுவனத்தை சேர்ந்த பயிற்சி மேலாளர் கிறிஸ் கூஜே, ``நிலவின் பரப்பில் இருந்த கேமராக்கள் 500 EL சிஸ்டம் அடிப்படையிலானவை. எடையைக் குறைப்பதற்காக, காட்சியைப் படம் பிடிக்கும் வியூபைண்டர்கள், கண்ணாடி அம்சம் ஆகியவற்றை நீக்கி, நாங்கள் நிறைய வடிவமைப்பு மாற்றங்கள் செய்தோம்.விண்வெளி வீரர் உடையில் மார்புப் பகுதி பிராக்கெட் உடன் அது லாக் செய்யப்பட்டது. உண்மையில் படங்களை எடுக்க அது நகர்ந்து, சாய்ந்து செயல்பட்டது.தரைபரப்புகளின் படங்களின் ஒப்புமை வேறுபாடு அளவு மிக அதிகமாக இருப்பதால், எந்த நட்சத்திரங்களையும் நம்மால் காண முடியவில்லை'' என்கிறார்.

   காணொளி மற்றும் புகைப்பட நிபுணரான மார்க் ஸ்ச்சுபின், ``நல்ல வெளிச்சமான நாளில் வீட்டுக்கு வெளியில் நிற்கிறீர்கள், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே பார்க்கிறீர்கள், நீங்கள் இருக்கும் இடம் அதிக வெளிச்சமாக இருப்பதால் உள்ளே எதையும் தெளிவாக உங்களால் காண முடியாது'' என்கிறார்.

``நம்மிடம் நூறு மெகா பிக்சல் சென்சார் இருப்பதைப் போன்ற நவீன கால தொழில்நுட்பத்துக்கு ஈடானது இது. அதை நிலவின் தரைப்பரப்புக்கு நாம் இப்போது கொண்டு சென்றால், நட்சத்திரங்களையும், நிலவின் தரைப்பரப்பையும் ஒரே படத்தில் நம்மால் படம் பிடிக்க முடியாது'' என்கிறார் ஹசேல்பிளாட் புகைப்பட கருவி நிறுவனத்தை சேர்ந்த பயிற்சி மேலாளர் கிறிஸ் கூஜே.

``ஸ்டூடியோவில் அதைச் செய்வதில் உள்ள பிரச்சினைகளில் ஒன்று - நிலவின் பரப்பில் உள்ள தூசிகள். காற்று மண்டலத்தில் தூசி இல்லாவிட்டால், தூசி இருக்கும் சூழ்நிலையில் இருந்து மாறுபட்ட வகையில் அதன் செயல்பாடு இருக்கும். ஆகவே நீங்கள் காற்றை வெளியே எடுத்து வெற்றிடமாக உள்ள ஸ்டூடியோவை உருக்க வேண்டும். ஸ்டூடியோ வெற்றிடமாக இருக்கும்போது, வெளியில் உள்ள காற்று மண்டலத்தின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய அளவுக்கு, நம்ப முடியாத வகையில் ஸ்டூடியோ பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்'' என்று மார்க் ஸ்ச்சுபின் தெரிவிக்கிறார்.

டல்லாஸ் கேம்ப்பெல், "உங்களால் போலியாக உருவாக்கப்படும் விஷயத்தை நம்ப வைப்பதற்கு நீங்கள் உண்மையிலேயே கடினமாக முயற்சிக்க வேண்டும். விஞ்ஞானிகள், பொறியாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் இது நடப்பதற்கு உழைத்த 20000 கம்பெனிகள் மீது அவர்களுக்கு ஏன் நம்பிக்கை வரவில்லை? விஞ்ஞானிகள் மீது நம்பிக்கையில்லை. ஆனால் ஸ்டான்லி குப்ரிக் மற்றும் அவருடைய திரைப்பட செட் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார்.

``அமெரிக்காவும், சோவியத் யூனியனும் 1950களின் மத்தியில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானிகளின் போட்டியில் இருந்தபோது, விண்வெளிப் போட்டியின் உச்சகட்டமாக நிலவுக்கான பயணம் வந்தது. பின்தொடர்ந்து கண்காணிக்கும் திறன்களின் அதிநவீன வசதிகள் சோவியத் யூனியனிடம் இருந்தன. ஏவுகணைகள் மற்றும் விண்கலன்களைக் கண்காணிக்க அவர்கள் அதைப் பயன்படுத்தியிருக்கலாம். இதுபோன்ற மோசடிகளை கண்காணிக்க முடியாமல் போய்விட்டதா என்பது சந்தேகத்துக்குரியது. சொல்லப்போனால், பெரிய பிரச்சார வெற்றியை ஈட்டுவதற்காக, இதை அம்பலப்படுத்துவதில் அவர்களுக்கு மிகுந்த உந்துதல் இருந்திருக்க வேண்டும்'' என்று கூறுகிறார் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விரிவுரையாளர் அன்டோயின் பவுஸ்க்வெட்.

டல்லாஸ் கேம்ப்பெல், ``வான் அலென் பெல்ட் பற்றி அப்பல்லோ பொறியாளர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அது அதிக காலம் அங்கில்லை மற்றும் வான் அலென் பெல்ட் பலவீனமாக உள்ள பகுதி வழியாக அதன் பாதை அமைந்திருந்தது.நிலவின் கற்களை பூமிக்கு கொண்டு வருவது ஆதாரமாக இருக்கும், மோசடி என்ற குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்க உதவும் என்று நீங்கள் நினைக்கலாம்'' என்று தெரிவிக்கிறார்.

 பிரிட்டன் விண்வெளி முகமையை சேர்ந்த இயற்பியலாளர் லிப்பி ஜாக்சன், ``அந்தக் கற்கள் இப்போதும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் சில கற்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் தொடப்படாமல் உள்ளன. காலப்போக்கில் நல்ல தொழில்நுட்பங்கள் வரும், அப்போது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகும் என்று 1960 மற்றும் 70களில், விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர்." என்று கூறுகிறார்.

 டல்லாஸ் கேம்ப்பெல், "அப்பல்லோ விண்கலன்களில் சென்ற விண்வெளி வீரர்கள் லேசர் பிரதிபலிப்பு சாதனங்களை நிலவில் நிறுவியுள்ளார்கள். அது அசையாமல் இருக்கும் ஒரு சாதனம். பூமியில் இருந்து லேசர் கதிர்களை அந்த சாதனத்தை நோக்கி நீங்கள் செலுத்த முடியும்'' என்கிறார்.

``நிலவின் போக்கில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும், அதன் சுற்றுப்பாதை போக்கை அறிந்து கொள்ளவும் பூமியில் இருந்து நிலவுக்கு லேசர் கதிர்களை அனுப்பி, திரும்பப் பெறுவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது'' என்று தெரிவிக்கிறார் லிப்பி ஜாக்சன்.
``மறுப்பாளர்களுக்கு இது போதுமானதாக இல்லை. அவர்கள் எப்போதுமே மோசடியாகவே பார்ப்பார்கள்'' என்கிறார் டல்லாஸ்.

புதிய திருப்பம்

"நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது மோசடியானது என்ற கருத்து பல தசாப்தங்களாக இருக்கிற நிலையில், இன்டர்நெட் காலத்தில் நிச்சயமாக அதற்கு புதிய திருப்பம் கிடைத்திருக்கிறது'' என்று தெரிவிக்கிறார் பிர்க்பெக், லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விரிவுரையாளர் அன்டோயின் பவுஸ்க்வெட்.

 டல்லாஸ், ``சில ஃபேஸ்புக் குழுக்கள் நிலவில் மனிதர்கள் இறங்கவில்லை என்ற சிந்தனைகளை பரப்புகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இதில் மக்கள் ஒன்று சேர்கிறார்கள். ஏனெனில் நாம் மனிதர்கள், நமது மூளைகள் தவறு செய்யக் கூடியவை. நமக்கு இன்டர்நெட் இருக்கிறது. அது சரியானவற்றை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது'' என்கிறார்.