1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (15:04 IST)

ஹாங்காங்கில் 4 ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

ஹாங்காங்கில் நான்கு ஜனநாயக ஆதரவு பேரவை உறுப்பினர்கள் அவர்கள் வகித்து வரும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பிராந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீன நாடாளுமன்ற நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. ஹாங்காங் தனி சுதந்திரத்தை கோரும் செயல்பாடு, சீன இறையாண்மைக்கு எதிரானதாக பார்க்கப்பட வேண்டும் என்றும் தங்களின் முழக்கத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை கோரினால் கூட அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயலாக பார்க்கப்படும் என்றும் அந்நாட்டு நாடாளுமன்ற குழு தீர்மானத்தில் கூறியுள்ளது.

சிவில் கட்சியைச் சேர்ந்த ஆல்வின் இயூங், க்வொக் கா கீ, டென்னிஸ் க்வொக், ப்ரொஃபெனல்ஸ் கில்ட் கட்சியின் கென்னத் லியூங் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்.

இந்த நடவடிக்கை ஹாங்காங் சுயாதீனத்தில் வாழும் ஜனநாயக சார்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் மிரட்டலாக பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கடந்த ஜூலை மாதம் சீன மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, அத்தகைய சட்டத்தை கொண்டு வர ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் ஆதரவாக இருந்தபோது அவருக்கு எதிராக மாதக்கணக்கில் கடுமையாக போராட்டங்கள் வெடித்தன. எட்டு மாத போராட்டங்கள் காவல்துறையின் கடும் நடவடிக்கை மூலம் அமைதிப்படுத்தப்பட்ட நிலையில், அவ்வப்போது ஜனநாயக ஆதரவு குரல்களை சில செயல்பாட்டாளர்கள் ஹாங்குக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தவாறு எழுப்பி வருகின்றனர்.

ஹாங்காங் பேரவையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. இதில் 19 இடங்களில் ஜனநாயக சார்பானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நால்வர் உள்பட 12 உறுப்பினர்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள பேரவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஹாங்காங் பிராந்தியம், 1997ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அப்போது சீனாவசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரே நாடு, இரு ஆளுகை என்ற கோட்பாட்டை பின்பற்றி அங்கு வாழும் மக்களின் சுயாதீன உரிமைகள், சுதந்திரத்தை 2047ஆம் ஆண்டுவரை பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
சிறப்பு சுயாதீன பிராந்தியம் என்ற வகையில், ஹாங்காங் தனக்கென ஒரு சட்ட அமைப்பையும், பல கட்சிகள், தனி நபர் பேச்சு சுதந்திரம், சுதந்திரமான பேரவை உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது

தமிழக பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் பழனிசாமி நாளை அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பார் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.