திங்கள், 29 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (14:20 IST)

கொரோனா வைரஸ்: இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன? - Coronavirus India Live Updates

கொரோனா வைரஸ்: இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன? - Coronavirus India Live Updates
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்தியாவில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 13,486 பேரிடம் 14,376 மாதிரிகள் பெறப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், டெல்லியில் பன்னாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தலைமை அலுவகங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென டெல்லி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கவும் டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே 90131 51515 என்ற எண்ணில் கொரனோ உதவி மையம் ஒன்றை இந்திய அரசு அறிவித்துள்ளது.
 
தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
கொரோனா வைரஸ்: இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன? - Coronavirus India Live Updates
இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179ஆக இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நால்வருக்கும், குஜராத்தில் மூன்று பேருக்கும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 18 நிறுவனங்களுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான உரிமத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆணையரகம் வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 
கொரோனா உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி; உலக அளவில் பத்தாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
 
கொரோனா வைரஸ்: அடுத்த இரண்டு நாட்களுக்கு இலங்கையில் முடக்க நிலை அறிவிப்பு நிர்பயா வழக்கு: நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் - மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்கள்
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா குறிப்பிடத்தக்க வகையில் அந்த நோய்த்தொற்றை தங்களது நாட்டில் கட்டுப்படுத்தியுள்ளதாக கூறும் நிலையில், கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால் தவித்து வரும் உலக நாடுகளுக்கு உதவும் நோக்கில் காணொளி வாயிலாக மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டோங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கருத்தரங்கில் இந்தியா பங்கேற்க உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் நிலை என்ன?
இந்தியாவில் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்று இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ள நிலையில், அன்றைய தினம் சென்னை கோயம்பேடு சந்தை இயங்காது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேபோன்று, அன்றைய தினம் காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை இல்லை என்று தனியார் பால் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், கோயம்புத்தூரில் உள்ள கேரளா - தமிழ்நாடு எல்லை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் மூடப்படவுள்ளதாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் முழு உடல்நலன் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 22ஆம் தேதி சுய ஊரடங்கு
 
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதுதொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) இரண்டு எட்டு மணிக்கு பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
 
அப்போது, கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் இந்தியாவில் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் இதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மோதி கூறினார். அன்று காலை காலை 7 முதல் இரவு 9 வரை இது அமலில் இருக்கும் என்றும் இந்த அனுபவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவி செய்யும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.