வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (17:26 IST)

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள்

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதல்முறையாக நடத்துகிறது பிபிசி. பொது மக்கள் வாக்களிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகள் பெயர்களையும் பிபிசி அறிவித்துள்ளது.

உங்களுக்கு பிடித்த இந்திய வீராங்கனைக்கு வாக்களித்து அவரை நீங்கள் வெற்றிபெற செய்யலாம்.

பிபிசியின் ஏதேனும் ஒர் இந்திய மொழி சேவையின் வலைதளத்திற்கு சென்று நீங்கள் வாக்களிக்கலாம்.

2020 பிப்ரவரி 17, 23:30 மணி (இந்திய நேரப்படி) வரை வாக்களிக்க முடியும். இதில் வெற்றி பெறும் வீராங்கனையின் பெயர் மார்ச் 8 -ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். இதற்கான விதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு (Privacy notice) ஆகியவை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் பிபிசி இந்திய மொழி சேவைகளின் வலைதளங்களில் அறிவிக்கப்படும். மேலும் பிபிசி ஸ்போர்ட்ஸ் வலைதளத்திலும் உங்களால் முடிவுகளை தெரிந்து கொள்ளமுடியும்.

பொதுமக்களின் அதிக வாக்குகள் பெறும் வீராங்கனையே பிபிசியின் இந்தாண்டுக்கான விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

வீராங்கணைகள் பெயர்கள் அறிவிப்பு

பொதுமக்கள் வாக்களிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீராங்கனைகள் பெயர்களை அறிவிப்பதற்காக டெல்லியில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிபிசி இந்திய மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் ரூபா ஜா, "இந்திய பெண்கள் புதிய வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் இதுவரை நாம் அதிகம் அவர்களை ஈடுபடுத்தி உரையாடவில்லை. வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இடமும் குரலும் கொடுப்பது பிபிசிக்கு மிக முக்கியமானது. இதை பிபிசி மிக வலுவாக உணர்கிறது. இது தொடர்பாக எங்களுக்கு கடமை இருக்கிறது. இதையொட்டி ஒரு உரையாடலைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம். இது நாங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி" என்றார் அவர்.

பிபிசி இந்தியா பசிபிக் பிராந்தியத்தின் வணிக மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் இந்து சேகர் சின்ஹா பேசுகையில், "இளம் விளையாட்டு வீராங்கணைகளின் நம்பிக்கையை வலுப்படுத்துவது, பத்திரிகையாளர்களாக நமது கடமை. எங்கள் நேயர்களோடு தொடர்ந்து கலந்துரையாடுவதை அங்கீகரிக்கும் செயல்தான் இந்த நிகழ்வு. இதற்காகத்தான் இந்த ஆண்டுக்கான இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்குகிறது பிபிசி" என்று பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கணை சோனம் மாலிக் பேசும்போது, "நான் சாக்ஷியை வெல்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால், அதற்காக நன்கு தயாரித்துக்கொண்டேன். என் நாட்டுக்காக விளையாடி வெல்லவேண்டும் என எப்போதும் விரும்பினேன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு, வாழ்நாள் சாதனை விருது வழங்கியும் பிபிசி கௌரவிக்கிறது.

நாட்டின் தலைசிறந்த விளையாட்டு செய்தியாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்களால் இந்த ஐந்து வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கும் குழுவினரால் அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள், பொதுமக்கள் வாக்களிப்புக்காக முன்மொழியப்பட்டுள்ளன.

அந்த ஐந்து வீராங்கனைகள் யார் யார்?

1.தூத்தி சந்த்


வயது 23, விளையாட்டு: தடகளம்

பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தற்போது இந்திய தேசிய சாம்பியனாக திகழ்கிறார் தூத்தி சந்த். 2016 கோடைகால ஒலிம்பிக்ஸில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை இவர். 2018ல் நடைபெற்ற ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தூத்தி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா இதில் வென்ற முதல் பதக்கம் இது. பல சர்ச்சைகளை கடந்து வந்த இவர், இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனையாக விளங்குகிறார்.

2. மானசி ஜோஷி
வயது: 30, விளையாட்டு: பாரா-பேட்மிண்டன்

2019ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றவர் மானசி ஜோஷி. உலகின் தலைசிறந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை பட்டியலில் இவர் முன்னணியில் உள்ளார். ஜகார்தாவில் 2018ல் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தன்வசமாக்கிக் கொண்டார்.

2011ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது இடது காலை இழந்தார் மானசி ஜோஷி. ஆனால், உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தை அது தடுக்கவில்லை.

3. மேரி கோம்

வயது: 36, விளையாட்டு: குத்துச்சண்டை (ப்ளைவெயிட் பிரிவு)

பிரபலமாக மேரி கோம் என்று அழைக்கப்படும் மாங்க்டே சங்கினிசாங், இதுவரை எட்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற ஒரே குத்துச்சண்டை வீரராவார் (ஆண்கள் அல்லது பெண்கள்). உலக தொழில்சாரா குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறைகள் வென்றுள்ளார் மேரி கோம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக மேரி கோம் திகழ்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட மேரி கோம், அவரது பெயருக்கு முன்னால் 'OLY' என்ற அடையாளத்தை வழங்கி உலக ஒலிம்பியன்ஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

4. பி வி சிந்து

வயது 24, விளையாட்டு: பேட்மிண்டன்

கடந்த ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனையானார் பி.வி சிந்து. உலக சாம்பின்யன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 5 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். மேலும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிவி சிந்து.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் முதல் 20 வீரர்களின் பட்டியலில் சிந்து செப்டம்பர் 2012ஆம் ஆண்டே இடம்பெற்றார். அப்போது அவருக்கு 17 வயதுதான். கடந்த நான்கு ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறார். வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிவி சிந்து வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள்.

5. வினேஷ் போகாட்

வயது: 25, விளையாட்டு: மல்யுத்தம் (ஃப்ரீஸ்டைல் பிரிவு)

2018ஆம் ஆண்டு ஜகார்தா ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்களை வினேஷ். காமன்வெல்த் போட்டிகளிலும் இரண்டு தங்கப்பதக்கங்களை இவர் வென்றுள்ளார். 2019ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்ற வினேஷ், வெண்கலப்பதக்கம் பெற்றார்.