ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (16:54 IST)

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் - தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று (ஜன. 10) தொடங்கப்பட்டுள்ளது.
 
கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய ஒமிக்ரான் திரிபு பரவலாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தும்போது, அவர்களுக்கு தொற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
 
இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 91 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசியும், 66 சதவீதத்தினர் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது, தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவை இன்று 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.
 
முன்னதாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, "தமிழ்நாட்டில் இதுவரை 8.83 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் சுமார் 5,65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9,78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20,83,800 நபர்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2,06,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,01,069 இணை நோய் உள்ளவர்கள், என மொத்தம் 4,00,013 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ...
 
பூஸ்டர் டோஸ் என்றால் என்ன?
கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் இன்னும் கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் வகையில் மூன்றாவதாக செலுத்தப்படும் தடுப்பூசியே பூஸ்டர் டோஸ். இதனை, மூன்றாவது தடுப்பூசி, கூடுதல் தடுப்பூசி என்றும் அழைக்கின்றனர். பூஸ்டர் டோஸ் என்பது இந்தியாவில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என அழைக்கப்படுகிறது.
 
பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது எப்படி?
1. முதல்கட்டமாக, சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இணை நோய்கள் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதில்லை.
 
2. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள்.
 
3. முதல் இரண்டு டோஸ்கள் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே வகை தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ள முடியும். வெவ்வேறு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்துவதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
 
4. பூஸ்டர் டோஸ் செலுத்தத் தகுதியுடையவர்கள், கோவின் இணையதளத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பூஸ்டர் டோஸ் செலுத்த மருத்துவர் சான்றும் தேவையில்லை. முன்பதிவு செய்தோ அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு நேரடியாக சென்றோ பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம்.
 
5. ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.