வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (13:47 IST)

ஹாங்காங் முக்கிய தலைகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா!

ஹாங்காங் சுயாதீன ஆளுகையை குறைவாக மதிப்பிடும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கேரி லாம் உள்பட ஹாங்காங் மற்றும் சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு.
 
இது தொடர்பான அறிவிப்பை இன்று வாஷிங்டனில் வெளியிட்ட அமெரிக்கா நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் மனூஷின், ஹாங்காங் மக்களுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்கும் என்று தெரிவித்தார். ஹாங்காங் புதிய பாதுகாப்பு சட்டத்தை இரு மாதங்களுக்கு முன்பு சீனா தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
 
அந்த நடவடிக்கை பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சர்ச்சையாக பார்க்கப்பட்ட நிலையில், ஹாங்காங்கில் உள்ள பிரிட்டன் வம்சாவளியினருக்கு குடியிரிமை வழங்குவதாக பிரிட்டன் அரசு சலுகை அறிவித்தது. இதேபோல, ஆஸ்திரேலியாவும், கனடாவும் அறிவித்தன.
 
இந்த நிலையில், ஹாங்காங்குக்கு வழங்கி வந்த வர்த்த சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா இரு வாரங்களுக்கு முன்பு பறித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அந்நாட்டின் முக்கிய பிரபலங்கள் மீதான தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
இதன்படி ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம், அந்த பிராந்திய காவல் ஆணையாளர் கிறிஸ் டாங், அரசியல் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்துள்ளது.
 
"ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சீன பெருநிலப்பகுதியிடம் ஒப்படைக்க வகை செய்யும் தலைமை நிர்வாகி கேரி லாமின் நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் கடுமையான எதிர்ப்புணர்வை தூண்டியதுடன் மாதக்கணக்கில் போராட்டங்கள் ஏற்பட காரணமானது" என்று அவருக்கு எதிரான நடவடிக்கையை விவரிக்கும் அமெரிக்க நிதித்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.