வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (19:41 IST)

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் மீது துப்பாக்கிசூடு

இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி மாவட்டத்தின் அக்மீமன பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்மீமன - மானவில் பகுதியிலுள்ள உபனந்த கனிஷ்ட பாடசாலையில் இரண்டு ராணுவ சிப்பாய்கள் கடமைகளுக்கான ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் இரண்டு நுழைவாயில்களிலும் ஒவ்வொரு ராணுவ சிப்பாய்கள்; கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பாடசாலை நுழைவாயிலுக்கு அருகில் வருகைத் தந்த ஒருவர், பாடசாலைக்குள் அத்துமீறி செல்ல முயற்சித்துள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, ராணுவ சிப்பாய்க்கும், குறித்த நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் ராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளமை போலிஸ் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இராணுவ சிப்பாய், சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய ராணுவ சிப்பாய், போலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தமைக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை போலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்கான காரணம்

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைகளின் நுழைவாயில்களில் ராணுவம், போலிஸார் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் பாடசாலைகளின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்ச நிலைமையை அடுத்தே, பாடசாலைகளில் பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவசரகால சட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசரகால சட்டம் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அவசர கால சட்டத்தின் பிரகாரம், நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ராணுவத்தினருக்கு அதிக பொறுப்பு காணப்படுவதாக ராணுவம் தெரிவிக்கின்றது.

ராணுவத்தினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, ராணுவத்தினரின் துப்பாக்கிகளை பறிக்க முயற்சித்தமை, பாரிய அச்சுறுத்தலான நிலைமை என்ற அடிப்படையிலேயே குறித்த ராணுவ சிப்பாயினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சுமித் அத்தபத்து பி.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.