செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (18:20 IST)

சூப்பர் மார்கெட் ஷாப்பிங்கில் செலவை குறைக்க 5 எளிமையான வழிகள்?

BBC
மாதத்திற்கான மளிகைப் பொருட்களின் பட்டியலை தயார் செய்து, மளிகைக் கடைக்கு சென்று வாங்கும் நிலை குறைந்து சூப்பர் மார்கெட்டுக்கு சென்று ஷாப்பிங் செய்யும் நிலை இன்றைய காலச்சூழலில் அதிகரித்து வருகிறது.

அடுக்கடுக்காக பல்வேறு பிராண்டுகளில் பொருட்களை பார்த்து வாங்குவது வசதியாக உள்ளது என்றாலும், பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிக்கும் பழக்கமும் இந்த சூப்பர் மார்கெட் கலாசாரத்தால் பெருகி விட்டது.

சூப்பர் மார்கெட் செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? உங்களின் மாதந்திர செலவு உங்களின் பர்சை பதம் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதோ சில டிப்ஸ்கள்.

பட்டியலிடுங்கள்

சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்வதற்கு முன்பு உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பட்டியலிட்டு கொள்ளுங்கள். அதற்கும் முன்னதாக உங்கள் அலமாரியில் ஏற்கனவே உள்ள பொருட்களை கணக்கெடுத்து வைத்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை அதை ஒரு நோட்டில் நீங்கள் குறிப்பிட்டு கொண்டு வந்தால் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

இதன்மூலம் நீங்கள் சூப்பர் மார்கெட்டிற்கு செல்லும்போது உங்களின் தேவை என்ன என்பது தெளிவாக தெரியும்.

முடிந்த வரை உணவுப் பொருட்களை வீணாக்குவதை தவிர்ப்பது சிறந்தது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் சில சமயங்கள் நேற்றைய தேவையை போல் இன்றைய தேவை இருக்காது.

யாரேனும் வெளியில் சாப்பிட நேரலாம், யாருக்கேனும் குறைவாக சாப்பிடத் தோன்றலாம். எனவே சமைப்பதற்கு முன் அன்றைய தேவையை சரியாக திட்டமிட்டு சமைப்பது சிறந்தது.

பிரிட்ஜ் இருக்கிறது என்பதற்காக ஒவ்வொரு நாளும் அன்றைய நாள் உணவை அதில் சேர்த்து வைத்து வருவது நல்லதல்ல.

அளவில் கவனம் தேவை

தேவையான பொருட்களை வாங்க வேண்டும் அதையும் தேவையான அளவில் வாங்க வேண்டும் என்பதில் கவனம் தேவை.

சில சூப்பர் மார்கெட்டுகளில் நமக்கு தேவையான அளவில் பொருட்கள் கிடைக்காது.

உதாரணமாக மூன்று பேர் உள்ள ஒரு வீட்டில் இரண்டு கிலோ கோதுமை மாவு போதும் என்று வைத்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் சென்ற கடையில் ஐந்து கிலோ பாக்கெட்டு தான் உள்ளது என்றால் அதை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.

அதே சமயம் சில பொருட்களுக்கு சலுகை விலையை நிர்ணயித்திருப்பார்கள்.

அரை கிலோவாக வாங்கும் சோப்புத் தூள் ஒரு கிலோவாக வாங்கினால் 50 ரூபாய் மிச்சமாகிறது. அதை சேமித்து வைப்பதில் சிக்கல் இல்லை என்றால் நிச்சயம் அதை வாங்கலாம்.

மறக்காமல் பைகளை கொண்டு செல்லுங்கள்

பல சூப்பர் மார்கெட்டுகளில் பைகளுக்கு தனியாக பணம் வசூலிப்பார்கள். அதேபோல எண்ணெய் போன்ற பொருட்களை பாத்திரங்களில் வாங்க முடிந்தால் அதை கடைப்பிடிப்பது சிறந்தது.

ஏனென்றால் பாக்கெட்டிலிருந்து நீங்கள் அதை பாத்திரத்திற்கு மாற்றுவதில் பொருட்கள் வீணாவதை நீங்கள் தடுக்கலாம். பயன்படுத்துவதற்கும் எளிதானதாக இருக்கும்.

கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் சூப்பர் மார்கெட்டில் உள்ள பொருட்களின் பேக்கிங் பெரும்பாலும் அந்தப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக செய்யப்பட்டிருக்குமே தவிர வாடிக்கையாளர்களின் வசதிக்காக அல்ல.

காளான்களை (மஷ்ரும்களை) நீங்கள் வாங்கும்போது அது பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தால் அதை நீங்கள் பேப்பர் பைகளுக்கு மாற்றிவிடலாம்.

அதேபோல எந்த பொருளை எவ்வாறு சேமித்து வைப்பது, பூச்சிகள் அண்டாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது எப்படி என திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

விலையை ஒப்பிடுங்கள்

பொதுவாக சூப்பர் மார்கெட்டுகளை பொருத்தவரை பல்வேறு பிராண்டுகளை நாம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது.

தரத்தில் ஒன்றாக உள்ள இரு பொருளின் விலையில் மாற்றம் இருந்தால் நாம் விலைக் குறைந்த பொருளை தேர்வு செய்யலாம்.

அதேபோல வழக்கமாக நாம் செல்லும் சூப்பர் மார்கெட்டில் எம்ஆர்பி விலையிலேயே பொருட்களை கொடுக்கிறார்களா அல்லது அதில் மாற்றம் உள்ளதா, வேறு ஏதேனும் மொத்த விற்பனை கடையில் வாங்கினால் விலை மேலும் குறையுமா என்பதை ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் மாதமும் ஆகும் செலவை நோட் செய்து, பின் அதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

குறிப்பிட்ட மாதத்தில் அதிகமாக செலவு செய்திருந்தால் அது ஏன் என ஆராய்வது அவசியம்.

அவசியமற்ற விளம்பரங்களுக்கு செவி கொடுக்காதீர்கள்

சில சமயங்களில் நமது தேவையைத் தாண்டி ஆடம்பரங்களுக்கு நாம் செவி கொடுக்க நேரும். அதற்கு முக்கிய காரணமாக நாம் காணும் விளம்பரங்கள் அமைந்து விடும்.

உதாரணமாக நாம் வழக்கமாக வாங்கும் டீ தூளை காட்டிலும் ஏதேனும் காரணங்களுக்காக விலையுயர்ந்த வேறு ஒரு டீ தூள் சிறப்பானது என நாம் விளம்பரங்களில் பார்த்து அதனை வாங்க முற்படுகிறோம்.

நமது வழக்கத்திலிருந்து அந்த விலை உயர்ந்த டீ தூளுக்கு மாறுவதால் ஏதேனும் நன்மை விளையும் எனில் நாம் அதற்கு மாறலாம். ஆனால் தேவையில்லாமல் ஏதோ புதியதாக முயற்சி செய்யலாம் என யோசித்தால் பணம் விரயம்தான்.