வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:00 IST)

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்.! தலை முடியை இழுத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..!!

Attack
அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்கச் சென்ற, பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (33). இவர் சரக்கு வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று காளிக்குமார் சரக்கு வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல், காளிக்குமாரை, அரிவாளால்  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
 
இதில் படுகாயம் அடைந்த காளிக்குமாரை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.‌ காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்‌. 
 
அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.‌ அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்ட நிலையில், டிஎஸ்பி காயத்ரியின் தலை முடியை ஒருவர் இழுத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.