1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சத்தி: சாலையை நோக்கிப் படையெடுக்கும் யானைகள்

ஈரோடு சத்தியமங்கலம் யானைகள் கூட்டம் தண்ணீர் தட்டுப்பாடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு இப்போதே குடிதண்ணீர் பிரச்சினை தொடங்கியுள்ளது.

வனப்பகுதியில் மழை பெய்யாத காரணத்தால் வனவிலங்குகள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கும், முக்கிய சாலைகளுக்கும் படையெடுத்து வருகின்றன. காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக தண்ணீர் தேடி சாலைகளுக்கு வந்து விடுகின்றன.

இந்த வனப்பகுதியில் காட்டுயானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி மற்றும் மான்கள்அதிகமாக வசித்து வருகின்றன.

இந்த விலங்குகள் வனப்பகுதிக்குள் இருக்கும் செடி,கொடிகளை தின்று விட்டு அங்குள்ள குளம், குட்டைகளில் உள்ள தண்ணீரை குடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. அண்மையில் இப்பகுதியை வனவிலங்குகள் சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், சத்தியமங்கலம் வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் இருக்கும் குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் வற்றி காணப்படுகிறது.
webdunia photoWD


இதனால் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டையில் வனத்துறை அதிகாரிகள் தண்ணீரை விட்டுள்ளனர். இங்கு மாலை 4 மணிக்கு மேல் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடிப்பதை பார்க்க முடிகிறது.

இந்த காட்டு யானைகள் குட்டையில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு சாலையில் ஒன்றுகூடி நின்று விடுகின்றன. இதனால் இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் லாரிகள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. பேருந்துகளில் செல்லும் பயணிகள் யானைக் கூட்டத்தை பார்த்த வண்ணம் செல்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சப்படுகின்றனர்.
About Writer
Webdunia