4 ஆண்டுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்
PTI
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மும்பை தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர் கோரியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. கசாப் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் நிராகரித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இத்தகவலை மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிபடுத்தியுள்ளார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
