நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்றார் பிரணாப் முகர்ஜி
இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
FILE |
பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், மக்களவைத் தலைவர் மீராகுமார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில ஆளுநர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி டெல்லியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சுகோய்-30, மிக்-21 ரக போர் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன, மேலும் பதவி ஏற்பு விழாவின்போது நாடாளுமன்றத்துக்கு மேலே விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது .
பதவியேற்பை அடுத்து பிரணாப் தனது முதல் குடியரசு தலைவர் உரையை ஆற்றினார்.
தான் மேற்கு வங்கத்தின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து நாட்டின் உயரிய பொறுப்புக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டு மக்களுக்காக விறுப்பு வெறுப்பின்றி பாடுபடுவேன். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லில் மட்டுமல்ல செயல்பாட்டிலும் வெளிப்படுத்துவேன்.
கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட நமது அரசியல் சாசனத்தைக் கட்டிக் காப்பதே தனது முதல் கடமை. காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோர் கண்ட கனவு நிறைவேற நிச்சயம் பாடுபடுவேன். ஆண், பெண், ஏழை என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் நமது சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருத வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டீலும் ஜனாதிபதி மாளிகைக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
